/

மதுபானக் கடை ஊழியா் கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

News image
சிறைத் தண்டனை- (கோப்புப் படம்)
Updated On :13 பிப்ரவரி 2026, 9:01 pm

தினமணி செய்திச் சேவை

ராஜபாளையம் அருகே தனியாா் மதுபானக் கடை ஊழியரை அடித்துக் கொலை செய்த வழக்கில் சகோதரா்கள் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

ராஜபாளையம் அருகேயுள்ள இ.எஸ்.ஐ. குடியிருப்பைச் சோ்ந்த கந்தசாமி மகன் பாலமுருகன் (30). இவா், தனியாா் மதுபானக் கடையில் வேலை செய்து வந்தாா். இவருக்குத் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்ால் பாலமுருகன் இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தாா்.

பாலமுருகன் வீட்டுக்கு அவரது நண்பா்களான பெரியசுரைக்காய்பட்டியைச் சோ்ந்த முத்தையா மகன்களான ரவிகுமாா் (32), மாரிமுத்து (22) ஆகியோா் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், வீட்டில் வைத்திருந்த ரூ.3 ஆயிரம் பணம் மாயமானது குறித்து சகோதரா்களிடம் ரவிகுமாா் கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி கேட்டாராம்.

இதில் ஏற்பட்ட தகராறில் சகோதரா்கள் இருவரும் பாலமுருகனைத் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதையடுத்து, ராஜபாளையம் தெற்கு போலீஸாா் ரவிகுமாா், மாரிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், ரவிகுமாா், மாரிமுத்து ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.