புதிய டைரி: பாவலர் கருமலைத்தமிழாழன்


நாள்காட்டித் தாளொன்று கிழிக்கு முன்பு
நல்லசெயல் செய்தோமா என்றே நம்மின்
ஆள்காட்டி விரலாலே நெஞ்சைத் தொட்டே
அடுத்தவர்கள் கேட்குமுன்பு நாமே கேட்டு
தாள்பதிக்கும் இற்றையநாள் பிறருக் காகத்
தன்னலமே இல்லாமல் செயலைச் செய்ய
நீள்கின்ற எண்ணத்தில் உறுதி யேற்று
நிதம்செய்தால் நம்பெயரைச் சொல்லும் ஞாலம் !
நல்லசெயல் செய்ததனைக் கல்வெட் டாக
நம்முன்னோர் வைத்ததாலே படிப்ப வர்கள்
நல்லசெயல் செய்தவரை அறிவ தோடு
நற்செயல்கள் புரிவதற்கும் முனைவர் அன்றோ
வல்லதொரு வரலாற்றை அறிவ தற்கும்
வடித்துவைத்த கல்வெட்டு உதவல் போல
சொல்லெழுத்தால் எழுதிவைத்த நாள்கு றிப்பும்
சொல்லிவிடும் முந்தையதைப் பிற்றை நாளில் !
நாட்குறிப்பு ஏடுதனில் நடந்த வற்றை
நாள்தோறும் எழுதிவைத்தால் வரலா றாகும்
நாட்குறிப்பு தவறுகளைச் சுட்டிக் காட்டி
நடக்காமல் திருத்திகொள வழியு மாகும்
நாட்டினுடை வரலாற்றை யுவான்சு வானின்
நாட்குறிப்பு நமக்கிங்கே அளித்த போல
காட்டியது ஆனந்த ரங்க பிள்ளை
கரம்வடித்த நாட்குறிப்பு புதுவை தன்னை !
(1)
நாட்குறிப்பு எழுதுகின்ற பழக்கந் தன்னை
நாம்பழக்கப் படுத்திவிட்டால் எழுதி எழுதி
நாட்டுமக்கள் போற்றுமெழுத் தாள ராக
நாளைபல குழந்தைகளும் வருவா ரன்றோ
வீட்டிற்குள் அமர்ந்தெழுதும் நாட்கு றிப்போ
விடியலினை நாட்டிற்குத் தரவும் கூடும்
காட்டாக வாழ்ந்தந்த வாழ்க்கை தன்னைக்
காட்சியாக்கி வடித்திடுவோம் குறிப்பில் நாளும் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...