/

ஆமை வேகத்தில் "கற்கும் பாரதம்' திட்டம்

வறுமை ஒழிய வேண்டுமானால் கல்லாமை ஒழிய வேண்டும் என்று பிரசாரம் செய்து வரும் அரசு, நடைமுறையில் கல்லாமையை ஒழிப்பதற்கான திட்டத்தில் மெத்தனம் காட்டி வருவது வேதனைக்குரியது. கல்வி அறிவு இல்லாதோருக்கு கற்பிப்ப

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:18 pm

க. தங்கராஜா

வறுமை ஒழிய வேண்டுமானால் கல்லாமை ஒழிய வேண்டும் என்று பிரசாரம் செய்து வரும் அரசு, நடைமுறையில் கல்லாமையை ஒழிப்பதற்கான திட்டத்தில் மெத்தனம் காட்டி வருவது வேதனைக்குரியது.

கல்வி அறிவு இல்லாதோருக்கு கற்பிப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ள "கற்கும் பாரதம்' திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டு 9 மாதங்கள் ஆன நிலையிலும் அதனை செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் 2012-ம் ஆண்டுக்குள் இலக்கை எட்ட முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

 நாட்டில் கல்வி அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையை 80 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பதற்காக புதிய எழுத்தறிவுத் திட்டமான கற்கும் பாரதம் (சக்சார் பாரத்) கடந்த 2009 செப்டம்பர் மாதம் பிரதமர் மன்மோகன் சிங்கால் தொடங்கப்பட்டது.

 அதன்படி நாடு முழுவதும் கல்வி அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள 385 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன.  15 வயதுக்கு மேற்பட்ட, பள்ளி இடைநின்றவர்கள் பயன்பெறும் இந்த புதிய எழுத்தறிவுத் திட்டத்துக்கு மொத்தம் ரூ.6,500 கோடி ஒதுக்கப்படும். இதில் மாநில அரசுகள் 25 சதவீதத்தை பங்குத் தொகையாக அளிக்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்கள் 10 சதவீதம் பங்கு அளிக்க வேண்டும்.

2012 மார்ச் 31 இலக்கு

வரும் 31.3.2012-க்குள் நாடு முழுவதும் சுமார் 7 கோடி பேருக்கு எழுத்தறிவிப்பதே இத் திட்டத்தின் நோக்கம் என்று திட்டத்தைத் தொடங்கி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். ஆனால் திட்டம் முடிவடைய 21 மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் இதைச் செயல்படுத்துவதற்கான பணிகள் ஆமை வேகத்திலேயே நடைபெறுகின்றன.

 தமிழகத்தில் பெண்களில் கல்வி அறிவு பெற்றவர்கள் 50 சதவீதத்துக்கு குறைவாக உள்ள தருமபுரி, ஈரோடு, பெரம்பலூர், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் அரியலூர் மாவட்டங்கள் இத்திட்டத்துக்குத் தேர்வு செய்யப்பட்டதில் முதல் கட்டமாக தருமபுரி, ஈரோடு, பெரம்பலூர், சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சரியான புள்ளி விவரம் இல்லாத நிலையில்...

 கல்வி அறிவு பெறாதவர்களின் சரியான புள்ளி விவரம் ஏதும் கையில் இல்லை. அதோடு

திட்டத்தைச் செயல்படுத்தும் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், திட்டத்தைச் செயல்படுத்தும் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில் உடனடியாக திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறோம் என்று இயக்குநரகம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டது.

 ஆனால் ஜூன் முதல் தேதியில்தான் இரண்டு மாவட்டங்களுக்கான திட்ட

ஒருங்கிணைப்பாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். வட்டார அளவிலான

ஒருங்கிணைப்பாளர்கள், பஞ்சாயத்து அளவில் பயிற்றுவிக்கும் தன்னார்வலர்கள், அவர்களுக்கான பயிற்றுநர்கள் போன்றவர்களை இன்னும் நியமனமே செய்யவில்லை என்று மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஏன் தாமதம்

 தேசிய எழுத்தறிவு முனைப்பு இயக்கத்தில் இதுவரை பணியாற்றிய வளர்கல்வி பணியாளர்களுக்கு எழுத்தறிவித்தலில் போதிய அனுபவம் இருந்த நிலையிலும், அவர்களைத் தவிர்த்துவிட்டு புதியதாக ஆள்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு கற்பித்தல் பயிற்சி அளித்து திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

இதுவும் இத்திட்டத்தை தாமதப்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு அதற்கான நிதியை உடனடியாக ஒதுக்கவில்லை. இதனால் மாநில அரசும் தனது பங்குத் தொகையை வழங்க தாமதம் ஏற்பட்டுள்ளது.  இதற்கிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பயனாளிகளுக்கான 14 லட்சம் பாடப் புத்தகங்களும் பாடநூல் கழகம் மூலம் அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ளது. ஆனால் இவற்றை செயல்படுத்தும் ஊழியர்கள்தான் எங்கே உள்ளனர் என்பது யாருக்கும் தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.