/

கேமரா உமன் சுஹாசினி

திரைப்படத் துறையில் தொழில் நுட்பப் பரிவில் பெண்கள் பணியாற்றுவது மிகவும் குறைவு. அதிலும் குறிப்பாக

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:12 pm

உமா ஷக்தி.

திரைப்படத் துறையில் தொழில் நுட்பப் பரிவில் பெண்கள் பணியாற்றுவது மிகவும் குறைவு. அதிலும் குறிப்பாக ஒளிப்பதிவுத் துறையில் பயிற்சி பெற பெண்கள் முன் வருவதில்லை. ஆனால் கமலஹாசனின் அண்ணன் சாருஹாசினி திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுத் துறையில் பயின்று கொண்டே திரைப்படங்களில் கேமரா உதவியாளராகவும் பணியாற்றுகிறார். அத்துடன் சில படங்களில் கதாநாயகியாகவும் நடிக்கிறார்.

ஒளிப்பதிவுத் துறையில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது? என்று சுஹாசினியிடம் கேட்டேன்.

‘சிறு வயது முதல் திரைப்படங்களைப் பார்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். வெளியாகும் எல்லாப் படங்களையும் அநேகமாகப் பார்த்துவிடுவேன். அது மட்டுமின்றி சித்தப்பா கமலஹாசன் நடிகராக இருப்பதால் திரைப்படத் துறையில் எனக்கு ஏராளமான் நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களுடன் சேர்ந்து கொண்டு பல படங்களின் ‘பிரிவியூ’ காட்சிகளையும், ‘ரஷ்’ காட்சிகளையும் பார்ப்பேன். சினிமா சம்பந்தமாக எனக்கு ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது அவர்களிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்வேன்.

கமலஹாசனிடம் சினிமாத் தொழில் நுட்பம் சம்மந்தமாக ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. நான் அந்தப் புத்தகங்களை ஆர்வத்துடன் விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன். நாளடைவில் எனக்குக் கேமராத் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் பயிற்சி பெற விரும்பினேன். அப்பாவையும் சித்தப்பாவையும் கலந்தாலோசித்து விட்டு, அவர்கள் அனுமதியுடன் புனே திரைப்படக் கல்லூரிக்கு விண்ணப்பம் செய்தேன். வயது குறைவாக இருப்பதால் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதன் பிறகு ‘அடையாறு திரைப்படக் கல்லூரியில்’ சேர்ந்து பயிற்சி பெற ஆரம்பித்தேன்’

‘திரைப்படக் கல்லூரியில் நீங்கள் எவ்வாறு பயிற்சி அளிக்கப்படுகின்றீர்கள்?’

‘முதல் வருடம் ஒளிப்பதிவின் ஆரம்ப நிலைகளை அறிந்து கொண்டு அடிப்படை அறிவ வளர்த்துக் கொள்கிறோம். இரண்டாம் ஆண்டிலேயே நாங்களே கேமராவை எடுத்துத் தனித்தே இயக்கிப் படமெடுக்க ஆரம்பித்து விடுகிறோம். பயிற்சியின் போது ஒரு வருடத்தில் முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களைப் பார்க்கிறோம். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மிகச் சிறந்த இயக்குனர்களின் படங்களை எங்களுக்குத் திரையிட்டுக் காட்டுகிறார்கள். நாங்கள் விமரிசனம் செய்து, விவாதித்து, அலசி, ஆராய்கிறோம். கல்லூரி நூலகத்தில் நிறைந்திருக்கும் ஆயிரம் கணக்கான சினிமாத் தொழில்நுட்பப் புத்தகங்களிலிருந்து எவ்வளவோ விஷயங்களைக் கற்றுக் கொள்கிறோம். அது மட்டுமன்றி பாலசந்தர், வின்சென்ட், ஸ்ரீதர்,, திருலோகசந்தர் போன்றவர்கள் அவ்வப்போது எங்கள் கல்லூரிக்கு வந்து விரிவுரை ஆற்றுவார்கள். இவ்வாறு பல வழிகளில் நாங்கள் பயிற்சி பெறுகிறோம்.’

‘அசோக் குமாரிடம் உதவியாளராக சேர்ந்தது எப்படி?’

‘என் தந்தை ’உதிரிப்பூக்கள்’ படத்தில் நடிக்கும் போது அசோக்குமாருடன் அறிமுகம் ஏற்பட்டது. கல்லூரி இல்லாத நாட்களிலும் ஓய்வு நேரங்களிலும் என்னைப் படப்பிடிப்புகளுக்கு வரச் சொன்னார் அசோக்குமார். படப்பிடிப்புக்குச் சென்று பயிற்சி பெற ஆரம்பித்தேன். சில சமயங்களில் கல்லூரிக்கு லீவு போட்டுவிட்டுப் படப் பிடிப்புக்குச் செல்வதுண்டு.

‘ஒளிப்பதிவுத் துறையில் பயிற்சி பெறும் நீங்கள் நடிக்க ஆரம்பித்தது ஏன்?’

‘நடிக்க ஆரம்பித்ததை ஒரு விபத்து என்றுடான் சொல்ல வேண்டும்! நடிப்பதற்கு நானாக வாய்ப்புத் தேடிச் செல்லவில்லை. ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்துக்காகப் புதுமுகத்தைத் தேடி அலைந்தபோது, கதாபாத்திரத்துக்குப் பொருத்தமானவர் ஒருவர்கூடக் கிடைக்கவில்லை. படப்பிடிப்புத் துவங்க வேண்டிய நாள் நெருங்கிவிடவே, எங்கள் யூனிட்டைச் சேர்ந்தவர்கள் நான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தியபோது என்னால் மறுக்க முடியவில்லை. நிஜ வாழ்க்கையில் நான் எப்படி இருக்கிறேனோ அதுபோலவே கதையில் வரும் கதாபாத்திரமும் இருப்பதால் நடிக்க ஒத்துக் கொண்டேன். நடிப்பைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் ஒருவரைப் போல ‘இமிடேன்’ செய்வேன். முதலில் ஒரு படத்துடன் நடிப்பதை விட்டுவிடலாம் என்றிருந்தேன். ஆனால் எங்கள் குடும்ப நண்பர் பாரதிராஜாவுடன் ஏதேனும் படங்களில் பணியாற்றி அவரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள விரும்பினேன். அவருக்கு அசிஸ்டண்டாக பணியாற்ற முடியாது. எனவே, அவர் படத்தில் நடித்துக் கொண்டே கற்றுக் கொள்ளலாம் என்றுதான் பாரதிராஜாவின் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன். வேறு பலரும் தங்கள் படங்களில் நடிக்க என்னை அழைத்தார்கள். நான் அந்த வாய்ப்புக்களைத் தட்டி கழித்துவிட்டேன். இப்போது இரண்டு மூன்று படங்களில் மட்டுமே நடிக்கிறேன். நடிப்பையே தொழிலாகிஅக் கொண்டுத் தொடர்ந்து படங்களில் நடிப்பதை நான் விரும்பவில்லை.’

பேட்டி - ராஜா செந்தில்நாதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.