இந்த வாரம் தினமணி.காம் நோ காம்ப்ரமைஸ் - 10 வது விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்திருக்கிறார் புகைப்படக் கலைஞர் செளம்யா நிழல்... இன்று இந்தியாவில் பெண்கள் அடியெடுத்து வைத்து சாதிக்க முடியாத துறை என்ற ஒரு துறையே இல்லை. சகலத்திலும் பெண்கள் புகுந்து தங்களது தடங்களை வெற்றிகரமாகப் பதித்து வருகின்றனர். அந்த வகையில் செளம்யா சென்னையின் பிரபல புகைப்படக் கலைஞர்களில் ஒருவராகப் பரிணமித்து வருபவர். வெறுமே புகைப்படக் கலைஞராக மட்டுமே இல்லாது தன் தந்தையுடன் இணைந்து ‘நிழல்’ ஸ்டுடியோ மூலமாக தான் கற்றுக் கொண்ட புகைப்படக் கலையின் எல்லைகளை விரிவடையச் செய்து கொண்டும் இருக்கிறார். தொழில்முறையாக மட்டுமன்றி தனக்கான சமூக அங்கீகாரத்தையும், சுயமரியாதையையும் ஈட்டிக் கொள்ளும் விதமாகவும் இத்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் செளம்யா. கல்லூரிக்காலத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் காலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி காம்பியரிங் செய்த அனுபவம் உண்டென்பதால் செளம்யாவின் தமிழ் உச்சரிப்பில் சோடை காண முடியாது. அட்சர சுத்தமாக அழகுத் தமிழ் பேசும் செளம்யாவுக்கு பிரபஞ்சன், மனுஷ்ய புத்திரன் உள்ளிட்டோரால் இலக்கியப் பரிச்சயமும் உண்டு.