குடி ஒரு வகையில் தனிமனிதப் பிரச்னையாக இருந்தாலும், இது தனி நபர் ஒழுக்கத்தையே சீரழித்து விடுகிறது. வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் மிகப்பெரிய சாதனையாளர்கள்கூட ஒரு காலத்தில் குடித்தே அழிந்துபோய் இருக்கிறார்கள். அரசும், ஆட்சியாளர்களும் இதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்? கருணாநிதிக்கு கவலையெல்லாம் அரசுக்கு வருமானம் தரும் முக்கியமான வருவாய் ஆதாரம் மதுபானக்கடைகள், அவ்வளவுதான். தமிழகத்திலுள்ள அனைத்து மதுக்கடைகளுக்கும் ஆந்திரம், கர்நாடகம், பெங்களூர், சென்னை, புதுச்சேரி, மதுராந்தகம், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய இடங்களில் இருந்துதான் அனைத்து வகையான மதுபான பாட்டில்களும் வந்து சேர்கின்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் உள்ளூரிலேயே உள்ள தென்னை, பனை மரங்களைப் பயன்படுத்தி ஏன் கள் இறக்கக்கூடாது என்ற புதிய குரல் இப்போது எழுந்துள்ளது. கள் இறக்குவதைக் குற்றமற்றதாக அறிவிக்க வேண்டுமென்றும், கள்ளை மதுபானப் பட்டியலிலிருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து இருக்கிறது. இதற்கு ஆதரவாக அண்மைக் காலங்களில் தென்னை, பனை மரத் தொழிலாளர்களால் பல போராட்டங்களும் நடந்துள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவு அளித்துள்ளன.