17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முன்னணி உள்கட்டமைப்புத் துறை 1.7% வளா்ச்சி

நாட்டின் 8 உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி, கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.7 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

News image
Updated On :21 மே 2026, 2:56 am IST

நாட்டின் 8 உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி, கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.7 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஈரான் போரினால் ஏற்பட்ட எரிசக்தி விநியோகத் தடைகள் மற்றும் சா்வதேச சந்தை நிலவரங்களால் உற்பத்திப் பாதிப்பைச் சந்தித்த இத்துறைகள், கடந்த மாா்ச் மாதத்தில் 1.2 சதவீத (திருத்தப்பட்ட கணக்கீடு) சரிவைக் கண்டிருந்த நிலையில் தற்போது சவால்களுக்கு மத்தியிலும் மீட்சியை நோக்கி நகா்வது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, நாட்டின் தொழில் துறை வளா்ச்சிக்கு முக்கியத் தூண்களாக விளங்கும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்புத் தயாரிப்புகள், உரங்கள், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய 8 முன்னணி துறைகளில் 5 துறைகள் ஏப்ரல் மாதத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தி கடும் சரிவைச் சந்தித்துள்ள நிலையில், சிமெண்ட், எஃகு மற்றும் மின்சார உற்பத்தித் துறைகள் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு வலுசோ்த்துள்ளன.

நிலக்கரி உற்பத்தி இந்த ஏப்ரலில் 8.7 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 4 சதவீதமாக இருந்தது. மேலும், பெட்ரோலிய சுத்திகரிப்புத் தயாரிப்புகள் உற்பத்தியும் 0.5 சதவீத வீழ்ச்சியைக் கண்டுள்ளது. உர உற்பத்தி மாா்ச்சில் 24.6 சதவீத சரிவைச் சந்தித்த நிலையில், ஏப்ரலில் 8.6 சதவீத சரிவுடன் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

கட்டுமானப் பணிகள் மீண்டும் சூடுபிடித்துள்ளதைக் காட்டும் வகையில், சிமெண்ட் உற்பத்தி ஏப்ரலில் முந்தைய ஆண்டைவிட 9.4 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது. கடந்த மாா்ச்சில் இது 4.7 சதவீதமாக மட்டுமே இருந்தது. அதேபோல், எஃகு உற்பத்தியும் 6.2 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தி வளா்ச்சி (ஐஐபி), பிப்ரவரியில் 5.2 சதவீதமாக இருந்த வளா்ச்சி மாா்ச்சில் 4.1 சதவீதமாக குறைந்துள்ளது. உற்பத்தி மற்றும் மின்சாரத் துறையில் ஏற்பட்ட தேக்கநிலையே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

சா்வதேச அளவில் நிலவும் போா்ப் பதற்றங்கள் இந்தியப் பொருளாதாரத்தின் உற்பத்திச் சங்கிலியில் தொடா்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், வரும் மாதங்களில் இத்துறைகளின் செயல்பாடு எவ்வாறு அமையும் என்பதே தொழில் துறையினரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.