மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் மேற்கு ஆசிய மோதல் குறித்த நிச்சயமற்ற சூழலால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் மீதான நம்பிக்கையை மங்கச் செய்து, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சுமார் 2 சதவீதம் சரிந்து, தொடர்ந்து 4வது வர்த்தக அமர்வாக சரிவுடன் நிறவடைந்தன.
அதே வேளையில், தொடர்ந்து வெளியேறி வரும் வெளிநாட்டு நிதி உள்ளிட்டவையால், இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு சரிந்தது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 1,565.78 புள்ளிகள் (2 சதவீதம்) வரை சரிந்து, 74,449.50 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 1,456.04 புள்ளிகள் சரிந்து 74,559.24 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 436.30 புள்ளிகள் (1.83 சதவீதம்) சரிந்து, 23,379.55 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் டெக் மஹிந்திரா, அதானி போர்ட்ஸ், எச்சிஎல், டெக், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டைட்டன் மற்றும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பங்குகள் அதிகபட்ச சரிவைச் சந்தித்தன. மறுபுறம் பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகள் உயர்ந்தன.
நிஃப்டி குறியீடுகளில், உலோகம், எண்ணெய் & எரிவாயு மற்றும் பொதுத்துறை வங்கிகள் ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்துக் குறியீடுகளும் சரிவுடன் வர்த்தகமானது. நிஃப்டி ஸ்மால்கேப் 100 மற்றும் நிஃப்டி மிட்கேப் 100 ஆகியவை முறையே 1.26 சதவீதம் மற்றும் 0.81 சதவீதம் சரிந்தன.
வங்கி நிஃப்டி குறியீடு 1 சதவீதம் வரை சரிந்த அதே வேளையில், அமெரிக்கப் பணவீக்கத் தரவுகள் வெளியாகவுள்ள நிலையில் நிஃப்டி - ஐடி குறியீடு 3.3 சதவீதம் சரிந்தன. இதில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ், எச்.சி.எல். டெக், மற்றும் விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் 2.5 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை சரிந்தன.
செவ்வாய்க்கிழமையன்று, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 35 காசுகள் சரிந்து, வரலாற்றிலேயே இல்லாத மிகக் குறைந்த அளவான 95.63ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது. பல மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தெஹ்ரானின் முன்மொழிவை, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நிராகரித்தார் அதிபர் டிரம்ப்.
கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 105 முதல் 107 டாலர் என்ற அளவில் இருப்பதும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதிய வரலாறு காணாத சரிவைச் சந்தித்திருப்பதும் அதே வேளையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தீவிரமாக வெளியேறி வருவது உள்ளிட்ட 'மும்முனைத் தாக்குதலால்' இந்தியப் பங்குகள் மீதான அழுத்தம் தீவிரமடைந்து வருகிறது.
பங்குச் சந்தையின் தரவுகளின் அடிப்படையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை அன்று ரூ. 8,437.56 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் முக்கிய குறியீடான கோஸ்பி, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை சரிவுடன் முடிவடைந்தன, அதே நேரத்தில் ஜப்பானின் முக்கிய குறியீடான நிக்கெய் 225 உயர்வுடன் நிலைபெற்றது.
ஐரோப்பிய சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகின. அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) உயர்வுடன் நிறவடைந்தன.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை, 2.75 சதவீதம் உயர்ந்து, பேரல் ஒன்றுக்கு 107.1 அமெரிக்க டாலர் என்ற அளவில் உள்ளது.
Summary
Equity benchmark indices ended lower for the fourth consecutive session on Tuesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









