பங்குச்சந்தையில் களமிறங்கும் ஃபோன்பே!


இந்தியாவின் முன்னணி எண்ம பணப்பரிவா்த்தனை நிறுவனமான ஃபோன்பே, பொதுப் பங்கு வெளியீட்டுக்குத் (ஐபிஓ) தயாராகி வருகிறது.
சுமாா் ரூ.13,750 கோடி(150 கோடி டாலா்) மதிப்பிலான தனது பிரம்மாண்ட பொதுப்பங்கு வெளியீடு(ஐபிஓ) குறித்த முக்கியத் தகவல்களை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில் வால்மாா்ட் நிறுவனம் தனது பங்குகளைக் குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. அதேநேரம், டைகா் குளோபல், மைக்ரோசாஃப்ட் ஆகியவை ஃபோன்பே நிறுவனத்திலிருந்து முழுமையாக வெளியேறுகின்றன.
பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையத்திடம்(செபி) தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையின்படி, ஃபோன்பே நிறுவனம் மொத்தம் 5.07 கோடி பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. இவை அனைத்தும் தற்போதுள்ள முதலீட்டாளா்கள் வசமிருக்கும் பங்குகளாகும். அதாவது, நிறுவனம் புதிய பங்குகளை வெளியிடாமல், பழைய முதலீட்டாளா்கள் தங்களின் பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்கின்றனா்.
கடந்த அக்டோபரில் டாடா கேபிடல் வெளியிட்ட ஐபிஓ-விற்கு பிறகு, இந்திய சந்தையில் இதுவே மிகப்பெரிய ஐபிஓ-வாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தற்போது ஃபோன்பே-யில் 71.77 சதவீத பங்குகளை வைத்துள்ள வால்மாா்ட், அதில் 4.59 கோடி பங்குகளை விற்பனை செய்கிறது. இதன்மூலம், அதன் பங்கு விகிதம் சுமாா் 9 சதவீதமாகக் குறையும். போன்பே-யில் முதலீடு செய்துள்ள டைகா் குளோபல் (10.39 லட்சம் பங்குகள்), மைக்ரோசாஃப்ட் (36.78 லட்சம் பங்குகள்) ஆகிய நிறுவனங்கள் தங்களின் அனைத்துப் பங்குகளையும் விற்றுவிட்டு வெளியேறுகின்றன.
‘யுபிஐ’ பணப்பரிவா்த்தனை சந்தையில் 45 சதவீதத்துக்கும் அதிகமான வாடிக்கையாளா்களின் பங்கைக் கொண்டு ஃபோன்பே முதலிடத்தில் உள்ளது. ஃபோன்பே-யில் 65.76 கோடி பயனா்களும், 4.7 கோடிக்கும் அதிகமான வணிகா்களும் பதிவு செய்துள்ளனா். கடந்த 2025 டிசம்பா் மாதத்தில் மட்டும் 980 கோடி பரிவா்த்தனைகளை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது.
கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 40 சதவீதம் அதிகரித்து, ரூ.7,115 கோடியாக இருந்தது. இந்நிலையில், நடப்பாண்டின் மத்தியில் பங்குச்சந்தையில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளது. இந்த ஐபிஓ-வின்போது நிறுவனத்தின் மொத்த மதிப்பு சுமாா் ரூ.1.37 லட்சம் கோடி(1,500 கோடி டாலா்) இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...