ஜி.எஸ்.டி. பழைய கார் தொழிலுக்கும் சோதனை
பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்டுள்ள தொழில் மந்தத்தில் பழைய கார்கள் விற்பனையும் சிக்கித் திணறி வருகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விற்பனையான எண்ணிக்கையில் பாதி அளவுக்கே இப்போது பழைய


பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்டுள்ள தொழில் மந்தத்தில் பழைய கார்கள் விற்பனையும் சிக்கித் திணறி வருகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விற்பனையான எண்ணிக்கையில் பாதி அளவுக்கே இப்போது பழைய கார்கள் விற்பனையாகி வருவதாக அந்த தொழிலில் ஈடுபட்டு வருவோர் கவலை தெரிவிக்கின்றனர்.
கார் நிறுவனங்களே தங்கள் நிறுவனத்தின் பிரிவாக பழைய கார்களை விற்கின்றன. அதற்கான பிரத்யேக காட்சி அறைகளுடன் பழைய கார் விற்பனைத் தொழில் விரிவடைந்துள்ளது. கார் விற்பனை சந்தையில், ஒரு புதிய கார் விற்பனையாகும் போதெல்லாம் ஒரு பழைய காரும் விற்பனை ஆவதாக சந்தை தகவல்கள் கூறுகின்றன.
புதிய கார் விற்பனை சந்தை ஆண்டுக்கு 18 சதவீத வளர்ச்சி பெற்றுவருகிறது என்றால், பழைய கார் விற்பனை சந்தை வளர்ச்சி 26 சதவீதமாக உள்ளது என ஓர் ஆய்வறிக்கை தகவல் கூறுகிறது.
கடும்போட்டி
பழைய கார் விற்பனை தொழிலில் நல்ல லாபம் கிடைப்பதால் அதில் அதிகமான தொழில்முனைவோர் ஆர்வம் காட்டி வந்தனர். இப்போதெல்லாம் பெரிய நகரங்களில் மட்டுமல்லாது சிறிய நகரங்களில் கூட பழைய கார் விற்பனை நிறுவனங்களையும், அங்கே வகை வகையான கார்கள் அணிவகுத்து நிற்பதையும் காண முடிகிறது. பழைய காரை விற்பனை செய்தால் 10 முதல் 20 சதவீதம் வரை லாபம் கிடைக்கலாம். எனவே, பழைய கார் விற்பனை தொழிலில் தனி நபர்கள் மட்டுமல்லாது கார்களைத் தயாரிக்கும் பெரிய நிறுவனங்களே களம் இறங்கியுள்ளன. இதனால் பழைய கார் விற்பனை சந்தை கடும் போட்டியை சந்தித்து வருகிறது.
எனினும், இன்னமும் பழைய கார் விற்பனை சந்தையானது, அமைப்பு சாரா விற்பனையாளர்களின் கையில்தான் உள்ளது. மாருதி, ஹுண்டாய், மஹிந்திரா, டாடா, ஹோண்டா போன்ற பெரும் நிறுவனங்களின் கையில் பழைய கார் விற்பனை சந்தை 12 சதவீதம் என்றால், அமைப்பு சாரா விற்பனையாளர்கள் இந்த சந்தையை 88 சதவீத அளவுக்கு ஆக்கிரமித்துள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
ஆனால், பழைய கார்கள் விற்பனை சந்தைக்கு சவால்கள் இல்லாமல் இல்லை. மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் விதிமுறைகள் மற்றும் கடன் வசதிக் குறைவு போன்றவற்றை சந்தை எதிர்கொண்டுதான் வந்தது. கார் கடன் வழங்கும் நிதிநிறுவனங்கள் தாங்கள் வழங்கும் கடன்களில் 15 சதவீதம் மட்டுமே பழைய கார்களுக்கு கொடுக்கின்றன. புதிய கார்கள் வாங்க கடன் கொடுப்பதிலேயே அவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கடன் தொகையை முறையாக செலுத்தாவிட்டால் புதிய வாகனத்தைப் பறிமுதல் செய்து பணத்தைப் பெறுவது எளிது என எண்ணுகின்றனர்.
மேலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு என்பது கூடுதல் சவால். புதிய ரக கார்களில் இருக்கும் அனைத்து வசதிகளும் பழைய கார்களிலும் இருக்க வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. இந்த சவால்களுக்கு மத்தியில் இப்போது சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் இந்த பழைய கார் விற்பனை தொழில் நெருக்கடியை சந்தித்து வருவதாக கூறுகின்றனர்.
50 சதவீதம் வரை...
''கார்களுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. இது புதிய, பழைய என இரண்டு வகை கார்களுக்குமே பொருந்தும். புதிய கார்களுக்கு அவற்றின் சிலிண்டர் கொள்ளளவின் (சி.சி.) அடிப்படையில் நான்கு விதமான படிநிலைகளில் ஜி.எஸ்.டி. மற்றும் இதர வரிகள் என செலுத்தப்பட வேண்டிய மொத்த வரி குறைந்தபட்சம் 29 சதவீதமாகவும் அதிகபட்சம் 50 சதவீதமாகவும் உள்ளது.
புதிய கார்களுக்கு நிகர் என்பதுபோல் பழையவற்றுக்கும் அதே வரி விகிதம் இருப்பது நியாயமல்ல. தற்போது பழைய கார்கள் விற்பனை பாதியாக குறைந்துள்ளது. முன்பெல்லாம் மாதத்துக்கு 20 கார்கள் வரை விற்பனையாகும். இப்போது அதில் பாதியளவு கார்களை விற்பனை செய்யவே பெரும் சிரமமாக இருக்கிறது'' என்கிறார் மதுரையில் உள்ள பன்னாட்டு கார் நிறுவனத்தின் பழைய கார்கள் விற்பனை பிரிவின் நிர்வாகி ஒருவர்.
இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணப் பரிமாற்றம் செய்யக் கூடாது என்பதால் பழைய காரை வாங்க விரும்புவோர் அதற்கு மேல் பணம் கொடுத்து கார் வாங்கும்போது வருமான வரித்துறை கேள்வி கேட்குமோ என அச்சப்படுவதாலும் கார் விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
''பழைய கார்களுக்கும் 28 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவது நியாயமாகத் தெரியவில்லை. சொந்தப் பணத்தை முதலீடு செய்து பழைய கார்களை வாங்கி காட்சி அறைகளை அமைத்து விற்பனை செய்து வந்தவர்கள் கூட இப்போது கமிஷன் அடிப்படையில் தொழிலை மாற்றிக் கொண்டுள்ளனர். பழைய காரை விற்போரையும், வாங்குவோரையும் நேரடியாக சந்திக்க வைத்து விலையை அவர்களே பேசி முடிவு செய்து கொள்ள வைக்கிறோம்.
அதற்காக 2 முதல் 5 சதவீதம் வரை கமிஷன் மட்டுமே பெற்றுக் கொள்கிறோம்'' என்கிறார் மதுரையில் கடந்த 15 ஆண்டுகளாக பழைய கார் விற்பனை செய்து வரும் இளைஞர்.
காரில் பயணிக்கும் கனவுடன் ஒரு பழைய காராவது வாங்கலாம் என்ற நடுத்தர வர்க்கத்தினரின் ஆசைக்கும் ஜி.எஸ்.டி.யால் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...