உணவுப் பொருள் தயாரிப்பு, பதப்படுத்துதல், ஜவுளி, ஆயத்த ஆடை, பட்டாசு- தீப்பெட்டி, மருந்துப் பொருள்கள், ரப்பர், பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி போன்ற சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஏராளமாக இருக்கின்றன. சிறு, குறுந்தொழில் துறையில் முன்னேற்றத்தை அடைந்திருந்தபோதிலும், இங்கிருப்பவர்களுக்கு வேலையளிக்கும் வகையிலும், தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் பெரிய தொழிற்சாலைகள் தென் மாவட்டங்களில் இல்லாதது பெரும் குறையாக இருந்து வருகிறது. அதோடு, சிறு,குறு, நடுத்தரத் தொழில்களுக்கான ஒதுக்கீட்டில் இருந்து பல உற்பத்திப் பொருள்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துவிட்டது. இதனால், வரும் காலங்களில் சிறுதொழில் துறை பெரும் சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வு காணும் வகையில், 2011- 2016 ஆட்சிக் காலத்தில் மதுரை- தூத்துக்குடி தொழில் வழிச் சாலைத் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, முதலீட்டாளர்களுடனான சந்திப்புகள், சென்னையில் நடந்த முதலீட்டாளர் மாநாடு ஆகியவற்றில் மதுரை- தூத்துக்குடி தொழில் வழிச் சாலைத் திட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.