தமிழ் செய்திகள்
ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வின்போது பல மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் தலைப்புச் செய்தியாவது போலவே, நீட் தேர்வுக்குப் பின் வினாத்தாள் கசிவு, முறைகேடுகளும் தலைப்பில் இடம்பெறத் தவறுவதில்லை.
லட்சக்கணக்கான மாணவர்கள் வீட்டை விட்டு பயிற்சி நிலையங்களில் தங்கி பயிற்சி எடுத்து கடினமாக பயின்று தேர்வெழுதிவிட்டு, நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் நீட் தேர்வு ரத்து என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இத்தனைக்கும் ஜேஇஇ தேர்வை கணினி முறையில் சிறப்பாக நடத்தி வரும் தேசிய தேர்வு முகமை, ஏனோ எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வை மட்டும் வினாத்தாள் முறையில் நடத்தி, ஆண்டுதோறும் பல மாணவர்கள் லட்சக்கணக்கில் பணம் செலவிட்டு வினாத்தாளை முன்கூட்டியே வாங்கி தேர்வெழுத வழிவகுத்து வருகிறது.
கடந்த ஆண்டுகளிலும் வினாத்தாள் கசிவு, மாணவர்கள், பெற்றோர்கள் கைது வரை சென்றது. முறைகேடு புகார் காரணமாக கடந்த ஆண்டுகளிலும் குறிப்பிட்ட தேர்வு மையம் மற்றும் மாணவர்களுக்கு நீட் மறுதேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் முழுமையாக ரத்து செய்யப்படாத நிலையில், இந்த ஆண்டு அதுவும் நிகழ்ந்துவிட்டது.
நீட் தோ்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நிகழாண்டு மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ளது.
இதனால், தேர்வெழுதிய லட்சக்கணக்கான மக்களும் அவர்களது பெற்றோரும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எப்படி கசிந்தது வினாத்தாள்? நீட் தேர்வுக்கு முன்பு கையால் எழுதப்பட்ட வினா-விடை வங்கி ஒன்று, உண்மையான தேர்வு வினாத்தாளில் இருந்த கிட்டத்தட்ட 100 கேள்விகளுக்கும் மேல் கொண்டிருந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. மே 3ஆம் தேதி தேர்வு நடைபெற்ற நிலையில் 42 மணி நேரத்துக்கு முன்பு வாட்ஸ்ஆப் மூலம் மாணவர்களுக்கு இந்த வினாத்தாள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டேஹ்ராடூன், சிகர், ஜுன்ஜுனு பகுதிகளைச் சேர்ந்த 13 பேர் கைதாகியிருக்கிறார்கள். நீட் பயிற்சி மைய நிறுவனரும் இதில் கைதாகியிருக்கிறார். இந்த வினாத்தாள்கள் கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதில் கேரள மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வரும் மாணவர் ஒருவர் சுருவில் உள்ள ஒருவருக்கு மே 1 ஆம் தேதி வினாத்தாளை அனுப்பியிருக்கிறார். அதன்பிறகு, அது பல மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு நீட் தேர்வின்போது முறைகேடு நடந்ததாக வெளியான தகவலையடுத்து, பல பாதுகாப்பு நெறிமுறைகளை என்டிஏ அறிமுகப்படுத்தியது. பல முறை பயோ-மெட்ரிக் உறுதிப்படுத்தும் முறைகள் செய்யறிவு உதவியுடன் இயங்கும் சிசிடிவி கண்காணிப்பு, ஜிபிஎஸ் டிராக்கிங் வினாத்தாள்கள், 5ஜி சிக்னல் ஜாம்மர்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டன. சமூக ஊடகங்கள் கண்காணிக்கப்பட்டு, 65 டெலிகிராம் சானல்கள் முடக்கப்பட்டன.
இத்தனை செய்தும் என்ன நடந்தது? ஜேஇஇ தேர்வுகளில் நடக்காத இந்த முறைகேடுகள் ஏன் நீட் தேர்வில் நடக்கிறது. எத்தனை ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்தினாலும் கையால் எழுதிய வினாத்தாள் கசிவை தடுத்து நிறுத்த முடியவில்லையே.
இந்த தேர்வை எழுதினால்தான் எம்பிபிஎஸ் என்று அறிவித்துவிட்டு, பல லட்சம் பேர், சிறப்பான பயிற்சிகள் எடுத்து இதற்காக பல ஆண்டுகள் கல்வியை தொடராமல், நீட் தேர்வுக்கு பயிற்சி எடுத்து எழுதும் இந்த தேர்வை முறையாக நடத்த முடியாமல் போவதும் கவலையை அளிக்கவில்லையா?
ஆண்டுதோறும் வினாத்தாள் கசிவு எழுவதும் ஒரு முறைகூட தேசிய தேர்வு முகமை இதற்கு மாற்றாக கணினி முறையில் தேர்வை நடத்துவது குறித்து இதுவரை பரிசீலித்து இருக்காதா? அல்லது பரிசீலித்தபோது எது ஒன்று, அதற்கு தடையாக இருக்கிறது? அந்தத் தடையை அகற்ற ஒரு வழியுமே இல்லையா? இல்லை தேர்வை முறையாக நடத்துவதற்கே தேசிய தேர்வு முகமைக்கு விருப்பம் இல்லையா? லட்சோப லட்ச மாணவர்களின் உழைப்பை கேள்விக்குறியாக்குவது குறித்து தேசிய தேர்வு முகமைக்கு ஒரு தயக்கமும் இல்லையா என்பதே தற்போது அதிருப்தியில் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கேள்வியாக உள்ளது.
Summary
What is the problem with the National Testing Agency conducting the NEET exam in a computerized manner when it has been canceled?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








