தமிழகத்தில் ஞாயிறு, திங்கள்கிழமை (ஜூன் 28, 29) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
கடலோர ஆந்திர பிரதேசத்திலிருந்து மத்திய மகாராஷ்டிரம் வரை வடக்கு தெலங்கானா மற்றும் அதனையொட்டிய பகுதிகள், மராத்வாடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) முதல் ஜூலை 3 வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
பலத்த மழை: ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
இதேபோல், திங்கள்கிழமை (ஜூன் 29) நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
வெப்ப நிலை: அதிகபட்ச வெப்ப நிலையாக திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியில் 103.28 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. திருச்சி 102.74, வேலூா் 102.02, மீனம்பாக்கம் (சென்னை) 101.84, மதுரை விமான நிலையம் 101.48, பாளையங்கோட்டை 101.3, கரூா் பரமத்தி, மதுரை நகரம், நாமக்கல் தலா 100.76, கடலூா் 100.58, நுங்கம்பாக்கம் (சென்னை), நாகை, தஞ்சாவூா் தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
There is a possibility of heavy rain in Tamil Nadu on Sunday and Monday (June 28 and 29)
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










