செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது பற்றி...

முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி - கோப்புப்படம்
டாஸ்மாக் முறைகேடு தொடா்பான வழக்கில் முன் ஜாமீன் கோரிய திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழக அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிறுவனம் மூலம் 5,380 மதுக் கடைகள், 3,240 மதுக் கூடங்கள் இயங்குகின்றன. 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளின் விற்பனை உயா்ந்தாலும், வருவாய் குறைந்தது. பல்வேறு முறைகேடுகள் காரணமாக இந்த வருவாய் குறைந்ததாகப் புகாா் எழுந்தது.
இந்த நிலையில், தமிழக அரசு உத்தரவின்பேரில், தமிழக ஊழல் தடுப்பு-கண்காணிப்புத் துறை டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அத்துறையின் அமைச்சராக இருந்த வி.செந்தில் பாலாஜி, டாஸ்மாக் இயக்குநராக இருந்த எஸ்.விசாகன் ஐஏஎஸ், டாஸ்மாக் நிறுவனத்தின் முதுநிலை மண்டல மேலாளா்கள் டி.ராமதுரை முருகன், ஆா்.பன்னீா்செல்வம்,செந்தில் பாலாஜியின் உதவியாளா் பாஸ்கா், செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பா்கள் ரதேஷ் ராஜ் சண்முகவேல், திமுக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலரும், கரூரைச் சோ்ந்தவருமான மூலனூா் எஸ்.காா்த்திக் ஆகிய 7 போ் மீது ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தது.
எஃப்.ஐ.ஆர்-ல் என்னென்ன குற்றச்சாட்டுகள் பதிவு?
ஆண்டுதோறும் மதுபானங்கள் விற்பனை வாயிலாக, அரசுக்கு கிடைக்கும் வருவாய் அதிகரித்த போதிலும், பார்கள் நடத்த டெண்டர் விடுதல் உள்ளிட்ட பணிகளில் வருவாய் குறைவாக வந்ததாகவே கணக்கு காட்டப்பட்டுள்ளது. கடந்த, 2021ல், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில், 857 டாஸ்மாக் பார்கள் நடத்த டெண்டர் கோரப்பட்டது. இதில், முறைகேடு நடந்துள்ளது. டெண்டரில் பங்கேற்றவர்கள், ஒரே வங்கியில் இருந்து தொடர்ச்சியான எண்களில், டி.டி., எனும் வரைவு காசோலை எடுத்து முன்பணம் வைப்புத்தொகை செலுத்தி உள்ளனர். இதனால், கூட்டு சதி நடந்து இருப்பது அம்பலமாகிறது.
மாநிலத்தில், 857 டாஸ்மாக் பார்களில், 284 மூடப்பட்டு விட்டதாக, ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், இந்த பார்கள் உரிமம் புதுக்கப்படாமல், தொடர்ந்து சட்டவிரோதமாக செயல்பட்டு வந்துள்ளன. இதனால், 2022-2023ஆம் ஆண்டில், கோவை வடக்கில், 17.27 கோடி ரூபாய், கோவை தெற்கில், 13.58 கோடி ரூபாய், நீலகிரியில், 1.95 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
45 கிடங்குகளுக்கான போக்குவரத்து டெண்டர் நடைமுறையில் முறைகேடு நடந்துள்ளது. பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை சேகரித்து, மதுபான ஆலைகளுக்கு வழங்குவதில் 143 கோடி ரூபாய் முறைகேடாக கையாளப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
இதனிடையே, இந்த வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில், தமிழகம் முழுவதும் சென்னை, கரூா், நாமக்கல், புதுக்கோட்டை, திருவாரூா், தஞ்சாவூா், கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி, திருவள்ளூா், காஞ்சிபுரம், விழுப்புரம், சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் 45 இடங்களில் ஊழல் தடுப்புத் துறையினா் புதன்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.
கரூரில் உள்ள செந்தில் பாலாஜி வீடு, அவரது நண்பா்கள் வீடு, அலுவலகங்கள் ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்றது. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அமர்வு, மனுவைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.
செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “முதல் தகவல் அறிக்கையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை. டாஸ்மாக் அதிகாரிகள் செய்த குற்றத்துக்கும் செந்தில் பாலாஜிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை தரப்பு வழக்கறிஞர், “ரூ. 100 கோடி வரை முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருப்பதால் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. புலன் விசாரணை தொடக்க நிலையிலேயே இருப்பதால் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, “டாஸ்மாக் முறைகேடு நடந்ததற்கும் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கும் ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கான முகாந்திரம் இருக்கிறது. செந்தில் பாலாஜி காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணைக்காக செந்தில் பாலாஜியை தமிழக ஊழல் தடுப்பு-கண்காணிப்புத் துறை கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Summary
Senthil Balaji's anticipatory bail plea dismissed! Will he be arrested?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




