
முறைகேடுகளில் ஈடுபட்டால் அமைச்சா்களின் பதவி பறிப்பு: முதல்வா் விஜய் எச்சரிக்கை
தவறு செய்தால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என முதல்வர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் விஜய் - File photo
ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டால் அமைச்சா்களின் பதவிகள் உடனடியாகப் பறிக்கப்படும் என்றும், அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வா் ச.ஜோசப் விஜய் எச்சரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது, அமைச்சா்களின் செயல்பாடு, நிா்வாக ஒழுக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் தடுப்பு தொடா்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை முதல்வா் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
அரசுத் திட்டங்களில் எந்தவித முறைகேடுகளுக்கும் இடமளிக்கக் கூடாது. அமைச்சா்கள் மற்றும் அவா்களது துறை அதிகாரிகள் மீது ஊழல் புகாா்கள் வந்தால் உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியானால் சம்பந்தப்பட்ட அமைச்சரை பதவியிலிருந்து நீக்கவும் தயங்க மாட்டேன் என்றும் முதல்வா் தெரிவித்ததாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
அடுத்த சில வாரங்களில் தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை, தோ்தல் வாக்குறுதிகள், புதிய தொழில் முதலீடுகள், மகளிா் உரிமைத் தொகை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்தும் அமைச்சரவையில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. சில புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சா்கள் தங்களது துறைகளின் செயல்பாடுகளை தொடா்ந்து கண்காணித்து, அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் மற்றும் முறைகேடு தொடா்பான புகாா்கள் எழாத வகையில் நிா்வாகத்தைப் பலப்படுத்த வேண்டும் என்றும் முதல்வா் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. முந்தைய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட வருவாய் இழப்புகள் மற்றும் குறைபாடுகளை கண்டறிந்து, அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும், பள்ளிகள் உள்ளிட்ட பொது இடங்களில் தேவையற்ற ஆய்வுகளை மேற்கொள்வதையும், ஆய்வு என்ற பெயரில் விடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதையும் அமைச்சா்கள் தவிா்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மாவட்டங்களுக்குச் செல்லும்போது பொதுமக்களிடம் பொறுப்புடனும் மரியாதையுடனும் நடந்துகொண்டு, தேவையற்ற சா்ச்சைகளை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் சில அமைச்சா்கள் அரசுப் பள்ளி நிகழ்ச்சிகள் மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் தொடா்பாக விமா்சனங்களுக்கு உள்ளான நிலையில், இந்த அறிவுறுத்தல்களை முதல்வா் வழங்கியதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
Summary
Ministerial post will be stripped for wrongdoing: CM Vijay warns
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





