/

உதயநிதியை பதவியிலிருந்து நீக்க வேண்டும்: பியூஷ் கோயல்

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தது பற்றி...

News image
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் - ANI
Updated On :22 ஜனவரி 2026, 6:33 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாடு துணை முதல்வர் பதவியில் இருந்து உதயநிதி ஸ்டாலினை நீக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை பசுமைவழி இல்லத்தில், இன்று தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயலுக்கு காலை விருந்து அளிக்கப்பட்டது.

அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்புக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி - பியூஷ் கோயல் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பியூஷ் கோயல் பேசியதாவது:

”தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஊழல் நிறைந்த, வளர்ச்சிக்கு எதிரான திமுக அரசை முழுமையாக அகற்றும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். திமுக அரசு வருகின்ற தேர்தலில் நிச்சயம் தோல்வியைச் சந்திக்கும்.

உதயநிதி ஸ்டாலினின் தேசவிரோதக் கருத்துகளை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். சநாதனத்துக்கு எதிராக அவரது வெறுப்பு பேச்சுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். வெறுப்பு பேச்சு மற்றும் மக்களைப் பிளவுபடுத்தி வகுப்புவாத நல்லிணக்கத்தைக் குலைத்ததற்காகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.