/

தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றாமல் ஆளுநர் வெளிநடப்பு!

தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றாமல் ஆளுநர் வெளிநடப்பு செய்திருப்பது பற்றி...

News image
ஆளுநர் ஆர்.என். ரவி- கோப்புப் படம்
Updated On :20 ஜனவரி 2026, 4:31 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்துள்ளார்.

தேசிய கீதத்தை முதலில் பாடாமல் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலைப் பாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் வெளியேறியுள்ளார்.

ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மரபுப்படி ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழக சட்டப்பேரவைக்கு இன்று காலை ஆளுநர் ஆர்.என். ரவி வருகைதந்தார்.

முதலில் தமிழ்த் தாய் பாடல் இசைக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக தேசிய கீதம் இசைக்கப்படும் என்று சிறிது நேரம் ஆளுநர் காத்திருந்த நிலையில், உரையைத் தொடங்குமாறு பேரவைத் தலைவர் அப்பாவு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து உரையைப் படிக்க மறுத்த ஆளுநர், நான் தொடர்ச்சியாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கூறியும் அதைப் பின்பற்றாததில் வருத்தம் இருப்பதாக தெரிவித்துவிட்டு, பேரவையைவிட்டு வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை மரபுப்படி, ஆளுநர் உரைக்கு முன்பு தமிழ்த் தாய் வாழ்த்தும், உரைக்கு பின்பு தேசிய கீதமும் இசைக்கப்படுவதே வழக்கம் என்று அப்பாவு தெரிவித்தார்.

இதையடுத்து, ஆளுநர் அரசியலமைப்பை ஆளுநர் தொடர்ந்து மீறுவதாக தெரிவித்த முதல்வர், ஆண்டின் முதல் கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறையை மாற்ற பிற மாநில அரசியல் கட்சிகளுடன் இணைந்து முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

தொடர்ந்து, தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரையை அவர் படித்ததாக அவைக் குறிப்பில் பதிவு செய்யும் தீர்மானத்தை முதல்வர் கொண்டுவந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேறியதாக அப்பாவு அறிவித்தார்.

முதல்முறை அல்ல...

கடந்த 2022-ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக அரசு அளித்த உரையை ஆளுநா் முழுமையாக வாசிக்கவில்லை.

2023-ஆம் ஆண்டு சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடரில் ஆளுநா் ஆா்.என்.ரவி உரையாற்றியபோது, மகளிா் முன்னேற்றம், மதச்சாா்பின்மை, சுயமரியாதை, பெரியாா், அம்பேத்கா், கலைஞா் ஆகிய வாா்த்தைகளை அவா் வாசிக்கவில்லை. இதையடுத்து, தமிழக அரசு உரையில் அந்த வாா்த்தைகள் இடம்பெறும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அவையில் கூறியதால், ஆளுநா் பாதியிலேயே புறப்பட்டுச் சென்றாா்.

2024-ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும், தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடா்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி, ஆளுநா் உரையை வாசிக்காமல் சென்றாா். பின்னா், தமிழில் அந்த உரையை பேரவைத் தலைவா் அப்பாவு வாசித்து அவைக் குறிப்பில் பதிவு செய்தாா். இதேபோல், கடந்த 2025-ஆம் ஆண்டும் முதலில் தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி ஆளுநா் ஆா்.என்.ரவி வெளியேறினாா்.

summary

The Governor walked out of the Tamil Nadu Legislative Assembly without delivering his address!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.