/

சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய் ஞாயிற்றுக்கிழமை தில்லி புறப்பட்டார்.

News image
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்.
Updated On :18 ஜனவரி 2026, 10:27 am

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய் ஞாயிற்றுக்கிழமை தில்லி புறப்பட்டார்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

வழக்கின் விசாரணைக்காக, கடந்த டிசம்பா் இறுதியில் தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த், தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச்செயலா் சி.டி.ஆா். நிா்மல்குமாா், கரூா் மாவட்டச் செயலா் மதியழகன் ஆகியோா் தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஏற்கெனவே நேரில் ஆஜராகினா்.

இதைத் தொடா்ந்து, கடந்த ஜன.12 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு தவெக தலைவா் விஜய்க்கு சிபிஐ தரப்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. சிபிஐ அழைப்பாணையைத் தொடா்ந்து விஜய் கடந்த திங்கள்கிழமை தில்லி சென்று விசாரணைக்கு ஆஜரானார்.

அவரிடம் 6 மணி நேரங்களுக்கும் மேல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. விஜய் பதில்களை எழுத்துப் பூர்வமாகவும், விடியோவாகவும் அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.

பிறகு பொங்கல் பண்டிகை காரணமாக, விஜய்யின் கோரிக்கையை ஏற்று சிபிஐ அதிகாரிகள் விசாரணையை ஒத்திவைத்தனர். இதனைத்தொடர்ந்து, விசாரணைக்கு மீண்டும் நாளை(ஜன.19) ஆஜராக விஜய்க்கு அறிவுறுத்தப்பட்டது. இதற்காக விஜய், இன்று தனி விமானம் மூலம், சென்னையிலிருந்து தில்லி புறப்பட்டு செல்கிறார்.

தொடர்ந்து, சிபிஐ அலுவலகத்தில் நாளை காலை விசாரணைக்காக விஜய் ஆஜராகிறார். இதனிடையே விஜய்யின் வருகையையொட்டி, தில்லியில் காவல் துறை சார்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.