/

பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் மணிமண்டபம்: திறந்து வைத்தார் மு.க. ஸ்டாலின்!

பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 11:14 am

இணையதளச் செய்திப் பிரிவு

பரமக்குடியில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனார் மணிமண்டபத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (17.01.2026) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனார் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்தினை திறந்து வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றப் பின்னர், விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்தும், சொத்து சுகங்களை இழந்தும், தியாகங்கள் புரிந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் போற்றிப் பெருமைப்படுத்திடும் வகையில், காந்தி மண்டபத்தில் வ.உ.சி. அவர்கள் சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கக்கூடிய மண்டபம் பொலிவூட்டப்பட்டு அங்கு அவரது மார்பளவு சிலை, வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு திருவுருவச் சிலை, மருது சகோதரர்களுக்கு திருவுருவச் சிலை, கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்காவில் வ.உ. சிதம்பரனார் முழு உருவச் சிலை, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களுக்கு திருவுருவச் சிலை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களுக்கு திருவுருவச் சிலை, என பல்வேறு தியாக சீலர்களுக்கு சிலைகளை நிறுவி, மணிமண்டபங்கள் அமைத்து அவர்களின் புகழ்போற்றி வருகிறது.

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனார் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் திறப்பு விழா தியாகி வே.இமானுவேல் சேகரனார் அவர்கள் 1924-ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று பிறந்தார். இவரது சொந்த ஊர் முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் கிராமம் ஆகும். இவர் 1942-இல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் சென்றார். மேலும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகவும் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனார் அவர்களின் சமூக பங்களிப்பினைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டினையொட்டி அன்னார் நல்லடக்கம் செய்யப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் தியாகி வே.இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் 11.9.2023 அன்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைக்கப்பட்ட திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் இன்றையதினம் திறந்து வைத்து பார்வையிட்டார். தியாகி இமானுவேல் சேகரனார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.