/

கூட்டணி தொடர்பாக டிடிவி தினகரனுக்கு எந்த குழப்பமும் அழுத்தமும் இல்லை: அமமுக

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி...

News image
டிடிவி தினகரன்- கோப்புப் படம்
Updated On :13 ஜனவரி 2026, 12:17 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கூட்டணி தொடர்பாக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எந்தவொரு தயக்கமும் குழப்பமும் அழுத்தமும் இல்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உரிய நேரத்தில் கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டினை டிடிவி தினகரன் அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "கடந்த 5 ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில், கூட்டணி விவகாரத்தில் தமிழகத்தின் நலன் மற்றும் கழகத்தின் நலனை மையமாகக் கொண்டே கூட்டணி அறிவிக்கப்படும் என்பதை கழகப் பொதுச்செயலாளர் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அந்தச் செய்தி அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒளிபரப்பப்பட்டது.

இந்தச் சூழலில் சில ஊடகங்கள், கூட்டணி விவகாரத்தில் தயக்கம், குழப்பம், அழுத்தம் என பொய்ப் பிரசாரம் செய்து வருவதோடு, கடந்த சில தினங்களாக கழக நிகழ்ச்சிகளில் பொதுச்செயலாளர் கலந்துகொள்ளவில்லை எனவும் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.

கழக பொதுக்குழு நிகழ்ச்சிக்குப் பின்பாக, சொந்த வேலைகள் காரணமாகவும் பொங்கல் பண்டிகை நாள்கள் வருவதாலும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிடப்படவில்லை. அதே நேரத்தில், கூட்டணி தொடர்பாக கழகப் பொதுச்செயலாளருக்கு எந்தவொரு தயக்கமும் குழப்பமும் அழுத்தமும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு உரிய நேரத்தில் கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டினை அறிவிப்பார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

வருகின்ற 17 ஆம் தேதி பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா அன்று சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்ற நிகழ்ச்சியில் பங்கேற்று கழக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்திக்கவுள்ளார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து விலகிய டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை கூட்டணியில் சேர்க்க பாஜக முயற்சித்து வருகிறது. தவெகவிலும் இவர்கள் இருவரும் இணைய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த அறிக்கையின்படி டிடிவி தினகரன் விரைவில் கூட்டணியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பிப்ரவரி இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.