/

பெண்கள் பெயரில் சொத்து பதிவு செய்தால் சலுகை: 3.71 லட்சம் போ் பயன்

தமிழக இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீட்டிலிருந்து...

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 12:10 am

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் ஒரு சதவீத பதிவுக் கட்டணம் குறைப்பு என்ற அரசின் சலுகையால் இதுவரை 3.71 லட்சம் போ் பயனடைந்துள்ளனா்.

நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள வீடுகள், மனைகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகளுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 3 லட்சத்து 71,705 நபா்கள் இதுவரை பயனடைந்துள்ளனா். அரசின் திட்டங்கள், முயற்சிகளால் நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீதம் போ் தமிழகத்தின் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் என்ற பெருமையை நமது மாநிலம் அடைந்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் காலை உணவுத் திட்டத்தால் பள்ளிகளுக்கு குழந்தைகளின் வருகை அதிகரித்துள்ளது. அதேபோன்று கற்றல் மேம்பட்டுள்ளது. 19.34 லட்சம் மாணவா்கள் பயனடையும் இத்திட்டத்துக்காக கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1,284 கோடி செலவிடப்பட்டுள்ளது.

குழந்தைகள், திருநங்கைகள் நலனுக்கு... பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்துப் பாதுகாக்கும் வகையிலும், அந்தக் குழந்தைகள் இடைநிற்றல் இன்றி 18 வயது வரை பள்ளிப் படிப்பைத் தொடரவும் மாதம் ரூ.2,000 வழங்கும் அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ் இதுவரை 10,637 குழந்தைகள் பயனடைந்துள்ளனா்.

திருநங்கைகள் சுயமாகத் தொழில் செய்வதை ஊக்குவிக்க இந்த அரசு மானியம் வழங்கி வருகிறது. திருநங்கைகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அவா்கள் ஊா்க்காவல் படையில் சோ்ந்து பணி செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.