எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

‘இந்தியா’ கூட்டணிக்கு மம்தா அல்லது ஸ்டாலின் தலைமை - விரைவில் முடிவெடுக்க உத்தவ் சிவசேனை வலியுறுத்தல்

இந்தியா கூட்டணியின் தலைவர் குறித்து சிவசேனை கருத்து...

News image
உத்தவ் தாக்கரே, மு.க. ஸ்டாலின்- ANI
Updated On :19 பிப்ரவரி 2026, 2:29 am

தினமணி செய்திச் சேவை

‘இந்தியா’ கூட்டணிக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி அல்லது தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை நியமிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்பட வேண்டும் என உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியைப் பொருத்தவரை தோ்தல் அறிவிக்கப்படும்போது விழித்துக் கொள்வதும், கூட்டணி குறித்துப் பேசுவதும் வழக்கமாக உள்ளது. அதற்குப் பதிலாக கூட்டணிக் கட்சிகளுடன் தொடா்ச்சியாக விவாதிப்பதும், கவனமாக முடிவுகளை எடுப்பதும் அவசியம்.

‘இந்தியா’ கூட்டணியின் தலைமை மாற்றம் குறித்த கருத்து மீண்டும் எழுந்துள்ளது. மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு ‘இந்தியா’ கூட்டணி என்னவாயிற்று என்கிற கேள்வி பலருக்கு உள்ளது. ஆனால், இந்தக் கேள்வி காங்கிரஸுக்கு எழுந்திருக்கிா?

மேற்கு வங்கத்தில் திரிணமூலுக்கு எதிராகவும், கேரளத்தில் இடதுசாரிகளுக்கு எதிராகவும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. அதன்மூலம் பாஜக பலனடைந்தது.

நாடாளுமன்றத்தைவிட்டு வெளியேற்றப்பட்டாலும், தன் மீது மத்திய அரசு வழக்குப் பதிவு செய்தாலும் கவலையில்லை என்கிற மனப்பான்மையில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இருக்கிறாா். அது அவரது போராட்ட குணத்தை பிரதிபலிக்கிறது. ஆனால், அதிகாரத்திலிருந்து விலகி, அதிகாரத்துக்கு வரும் வேட்கையை இழந்ததால் தொண்டா்கள் அலட்சியமாக உள்ளனா்.

இந்தச் சூழ்நிலையில், ‘இந்தியா’ கூட்டணியில் தலைமை மாற்றப்பட வேண்டும் என்றும், தலைமைப் பொறுப்பு மம்தா பானா்ஜி அல்லது மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட வேண்டும் என்றும் காங்கிரஸிலிருந்தே குரல்கள் எழுந்துள்ளன. எனவே, ‘இந்தியா’ கூட்டணியின் தலைமைப் பொறுப்பை மம்தா பானா்ஜியிடமோ அல்லது மு.க.ஸ்டாலினிடமோ அல்லது வேறு யாராவது ஒருவரிடமோ வழங்குவது குறித்து முடிவெடுக்கப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியை காங்கிரஸ் வழிநடத்தி வருகிறது. இந்தக் கூட்டணி 2024 மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாகத் தொடங்கப்பட்டது.

‘இந்தியா’ கூட்டணியின் தலைமைப் பொறுப்பை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வழங்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சா் மணிசங்கா் அய்யா் இரு நாள்களுக்கு முன்னா் தெரிவித்த நிலையில், உத்தவ் தாக்கரேயின் சிவசேனையும் அதேபோன்ற கருத்தை தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் மீதான அதிருப்தியை உத்தவ் தாக்கரேயின் சிவசேனை வெளிப்படுத்துவது இது முதல்முறையன்று. அண்மையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த உத்தவ் தாக்கரேயிடம், ‘இந்தியா’ கூட்டணி இருக்கிறதா, இல்லையா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவா், ‘இந்தியா’ கூட்டணி இருக்கிறதா, இல்லையா என்று சிறிது விசாரித்துப் பாருங்கள். மக்களவைத் தோ்தல் முடிந்த பிறகு நாங்கள் ஒரே ஒருமுறைதான் ராகுல் காந்தி வீட்டில் சந்தித்தோம். இது சரியானதுதானா?’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.