/

2030க்குள் 33% மின்சாரப் பேருந்துகள்: முதல்வர் ஸ்டாலின்

2030 ஆம் ஆண்டிற்குள் 33% மின்சாரப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி...

News image
முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு- படம் - எக்ஸ்
Updated On :17 பிப்ரவரி 2026, 4:08 pm

இணையதளச் செய்திப் பிரிவு

2030ஆம் ஆண்டிற்குள் 33% மின்சாரப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப். 17) உறுதி அளித்துள்ளார்.

சென்னையில் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 4.0 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:

''திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து காலநிலை மாநாட்டை சிறப்பாக நடத்தி வருகிறது. அதிகரிக்கும் வெப்பநிலை, அதிக மழை, புயல், வறட்சி போன்றவை தற்போதைய பிரச்னைகளாக உள்ளன.

நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை கார்பன் சமநிலையாக மாற்ற திட்டமிட்டு வருகிறோம்.

மாநிலத்தின் கார்பன் உமிழ்வை குறைக்க 2030ஆம் ஆண்டிற்குள் மாநில பங்களிப்பை உருவாக்கி இலக்கு நிர்ணயிக்கப்படும்.

மாநிலம் முழுவதும் 5 லட்சம் சந்தன மரக்கன்றுகள் நடவு செய்யப்படும். காலநிலை மாற்றம் என்பது எங்கோ நடக்கும் நிகழ்வு அல்ல. நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுதான். அதனைக் கட்டுப்படுத்த வேண்டும்.

சென்னையில் 380 மின்சாரப் பேருந்துகள் உள்ளன. தமிழ்நாட்டில் 2030ஆம் ஆண்டிற்குள் 33 சதவிகித பேருந்துகளை மின்சாரப் பேருந்துகளாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின்வாகனங்களுக்கு 2027 வரை சாலை வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளோம்.

எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளும், அதன் திட்டங்களும் காலநிலை மாற்ற நடவடிக்கையோடு இணைந்து செயல்படும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்படும்'' என முதல்வர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.