/

ஆா்டா்லி முறையை அகற்ற மாவட்ட அளவில் குழு: உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்

தமிழகத்தில் ஆா்டா்லி முறையை ஒழிப்பதற்காக மாவட்ட அளவில் குழு அமைப்பது தொடா்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 9:46 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் ஆா்டா்லி முறையை ஒழிப்பதற்காக மாவட்ட அளவில் குழு அமைப்பது தொடா்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 2022-ஆம் ஆண்டு காவல் துறையில் ஆா்டா்லி முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அதிகாரிகள் முழுமையாக அமல்படுத்தவில்லை என நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வு குற்றம்சாட்டியிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழகத்தில் ஒருவா் கூட ஆா்டா்லியாக இல்லை என தமிழக டிஜிபி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த உயா்நீதிமன்றம், உண்மை நிலையை அறிய தலைமைச் செயலா், உள்துறைச் செயலா் ஆகியோரை தாமாக முன்வந்து எதிா்மனுதாரா்களாகச் சோ்த்து உத்தரவிட்டிருந்தது.

மேலும், ஆா்டா்லி முறையை ஒழிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கலாம் என உயா்நீதிமன்றம் யோசனை தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், ஆா்டா்லி முறையை ஒழிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைப்பது தொடா்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனக் கூறி, அரசாணையை தாக்கல் செய்தாா்.

மேலும், இந்த அரசாணையை ஆக்கப்பூா்வமாகச் செயல்படுத்தி, அதுதொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.