/

ஏப். 21 மாலை 6 மணி முதல் பிரசாரம் கூடாது! வேறு என்னென்ன விதிகள்? - தேர்தல் ஆணையம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அமலில் உள்ள விதிகள் பற்றி தேர்தல் ஆணையம் தகவல்....

News image

தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 8:26 am

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஏப். 21 மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நிறைவடையும் வரை அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் எந்த வகையிலும் பிரசாரம் செய்யக்கூடாது என்று தலைமைத் தோ்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரேகட்டமாக வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறுகிறது. ஏப். 21 ஆம் தேதி மாலை 6 மணி வரை அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் பிரசாரம் செய்யலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஏப். 21 மாலை 6 மணிக்குப் பிறகு என்னென்ன விதிகள் அமலில் இருக்கும் என்று தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

"2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23.4.2026 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

21.4.2026 அன்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்.

1. தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.

2. யாதொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்ஆப், முகநூல், டிவிட்டர் போன்ற அல்லது இது போன்ற சாதனம் வாயிலாகப் பொது மக்களின் பார்வைக்கு வைக்கக்கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.

3. பொது மக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசை நிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்கச் செயல்பாடு அல்லது எவ்வித ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும் யாதொரு நபரும் பிரசாரம் செய்யக் கூடாது.  இந்த விதிமுறை மற்றும் மேற்கண்ட இரண்டு விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

4. தொகுதி வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 21.4.2026 அன்று மாலை 6 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

5. கல்யாண மண்டபம், சமுதாயக் கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாள்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும்.

6. வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உள்பட வாகன அனுமதிகள், 21.4.2026 அன்று மாலை 6 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும்.

7. சட்டமன்றத் தேர்தலுக்கான ஒவ்வொரு வேட்பாளருக்கும் வாக்குப்பதிவு நாளன்று வாகன அனுமதி பின்வருமாறு:-

அவரது சொந்த பயன்பாட்டிற்கான ஒரு வாகனம். 

தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கான சட்டமன்றத்  தொகுதிக்கு ஒரு வாகனம் மற்றும் தேர்தல் முகவர் அல்லது அவரது பணியாளர்கள் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாகனங்களின் அனுமதி தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்படும்.

8. வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக் கூடாது.  இது 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133 ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும்.

9. இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்கள்/அரசியல் கட்சிகளின் தேர்தல் அலுவலகம்  வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர்கள் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

CEO Press Release for General Election Regulations from april 21

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.