/

ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு: உயர் நீதிமன்றம் அமைத்தது

காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு

News image
சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பு- -
Updated On :3 அக்டோபர் 2025, 12:09 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், விஜய் பிரசாரம் செய்த வாகனம் இடித்து, விபத்து நேரிட்டுள்ளதே, அந்த சம்பவத்தில், இடித்துவிட்டு ஓடியதாக விஜய் வாகனம் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை. அவ்வாறு செய்யாவிட்டால் மக்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும் என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தொடர்ந்து வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், கரூர் பலி சம்பவம் குறித்து காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என உத்தரவிட்டது.

மேலும், அனைத்து ஆவணங்களையும் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் கருர் காவல்துறையினர் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

தவெக கட்சியினருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம், கடும் கூட்டம் சேர்வதை முன்கூட்டியே கணித்திருக்க வேண்டாமா? இந்த இடத்தை காவல்துறைதான் அனுமதித்திருக்கிறது? பிறகு, இங்கு இவ்வளவு கூட்டம் சேரும்போது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? காவல்துறை வேடிக்கைப் பார்க்கிறது, ஆனால் நீதிமன்றம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது. விஜய் வந்த வாகனம் ஏன் பறிமுதல் செய்யப்படவில்லை.

கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் எல்லாம் சம்பவம் நடந்ததும் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்கள். ஒருவர் கூட பொறுப்பேற்கவில்லை. தலைவர்கள் பலரும் தலைமறைவாகிவிட்டார்கள். விஜய் பிரசாரம் செய்த வாகனம் ஏன் இன்னமும் பறிமுதல் செய்யப்படவில்லை.

இது குறித்து அரசு தரப்பில் விளக்கம் கூறியிருப்பதாவது, தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்த இதே இடத்தில்தான் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். விஜய் பிரசாரப் பயணத்துக்கு 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காவல்துறை அனுமதி வழங்கிய நேரத்தைக் காட்டிலும் மிகக் கால தாமதமாகவே விஜய் பேச வந்தார். மாலை 3 மணிக்கு விஜய் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 12 மணி முதலே மக்கள் கூடத் தொடங்கிவிட்டனர். இரவு 7 மணிக்கு மேல்தான் விஜய் அங்கு வந்தார். அரசு மீது மிக எளிதாக குற்றச்சாட்டுகளை சொல்லிவிடலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

summary

The High Court has ordered the formation of a Special Investigation Team (SIT) headed by IG Police Asra Garg.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.