/

ஜனவரியில் ஆஜராக விஜய்க்கு சம்மன்? சிபிஐ திட்டம்

தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்ப சிபிஐ திட்டமிட்டிருப்பது பற்றி...

News image
விஜய்- கோப்புப்படம்
Updated On :31 டிசம்பர் 2025, 7:35 am

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர் நெரிசல் விவகாரம்: கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சம்மன் அனுப்பத் திட்டமிட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செப்டம்பா் 27- ஆம் தேதி கரூரில் தவெக தலைவா் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் பலியாகினர். இதுதொடர்பான வழக்கை விசாரிக்க சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, கரூரில் முகாமிட்ட சிபிஐ அதிகாரிகள் தவெக நிர்வாகிகள், தமிழக அரசின் அதிகாரிகள், காவல்துறை அதிகரிகள், நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளா் ஆனந்த், தோ்தல் தலைமைப் பொதுச் செயலாளா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச் செயலாளா் நிா்மல் குமாா், கரூா் மாவட்டச் செயலாளா் மதியழகன் ஆகியோா் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, கடந்த திங்கள்கிழமை முதல் நேரில் ஆஜராகி வரும் தவெக நிர்வாகிகளிடம் இன்று மூன்றாவது நாளாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

அதேபோல், கரூா் மாவட்ட ஆட்சியா் எம். தங்கவேல், கரூா் மாவட்ட கண்காணிப்பாளா் ஜோஷ் தங்கய்யா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன், டிஎஸ்பி வி. செல்வராஜ், கரூா் நகர காவல் ஆய்வாளா் ஜி. மணிவண்ணன் உள்ளிட்டோரும் தில்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

விசாரணையின் போது, பரப்புரை கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்தது ஏன்? அவா் வருவதில் தாமதம் இருந்தால் அதற்கான காரணம் என்ன? பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன செய்யப்பட்டன? கூட்ட அனுமதி எப்படி பெறப்பட்டது? கூட்டத்துக்கு எத்தனை போ் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்பட்டது? போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், அனைவரும் அவர்கள் தரப்பு ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த நிலையில், வழக்கு விசாரணையின் இறுதிகட்டமாக தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய்யை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பத் திட்டமிட்டுள்ளனர்.

வருகின்ற ஜனவரி மாதத்தில் சம்மன் அனுப்பப்பட்டு விஜய்யிடம் நேரில் விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக தில்லியில் நேற்றிரவு செய்தியாளா்களிடம் கருத்துகளை தெரிவிக்க தவெக நிர்வாகிகள் மறுத்துவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.