/

அரசின் அலட்சியம், பொறுப்பின்மையை எடுத்துக் காட்டும் தாக்குதல் சம்பவம்: விஜய்

வடமாநில இளைஞர் தாக்குதல் சம்பவத்துக்கு தவெக தலைவர் கண்டனம்.

News image
தவெக தலைவர் விஜய்- கோப்புப் படம்
Updated On :30 டிசம்பர் 2025, 10:30 am

இணையதளச் செய்திப் பிரிவு

திருத்தணி வடமாநில இளைஞர் தாக்குதல் சம்பவம், ஆளும் அரசின் அலட்சியத்தையும் பொறுப்பின்மையையுமே எடுத்துக் காட்டுகிறது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

திருத்தணி ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் கடந்த சனிக்கிழமை கஞ்சா போதையில் 4 சிறுவர்கள், வடமாநில இளைஞரை வழிமடக்கி கத்தியால் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

வடமாநில இளைஞரை அரிவாளால் வெட்டி கொடூரமாகத் தாக்கிய 4 சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், நேற்று மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.

இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை. இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியத்தையும் பொறுப்பின்மையையுமே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருள்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை. இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி கற்க, ஏற்ற சூழல் இல்லை. தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லை. புத்தாக்கம் இல்லை. புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் இல்லை.

இவை எவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்காமல், யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? எஞ்சியிருக்கக் கூடிய ஆட்சிக் காலத்திலாவது போதைப் பொருள்கள் புழக்கத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கபட நாடக அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Tamizhaga Vetri Kazhagam president Vijay has stated that law and order have deteriorated and the future of the youth is being ruined by drugs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.