/

நாகை - இலங்கை இடையே அக்.15 முதல் கப்பல் போக்குவரத்து!

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு வரும் அக்டோபர்-15 ஆம் தேதிக்குள் கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

News image
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு
Updated On :6 பிப்ரவரி 2024, 1:16 pm

DIN

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு வரும் அக்டோபர்-15 ஆம் தேதிக்குள் கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்க இருப்பதையொட்டி நடைபெற்று வரும் பணிகளையும், சுங்கத்துறைக்கு சொந்தமான படகில் கடலுக்குள் சென்று பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்களின் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார் .

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து, 60 கடல் மைல்கள் தொலைவில், இலங்கையிலுள்ள காங்கேச துறைமுகத்திற்கு கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு கடல்சார் வாரியம், மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை மற்றும் வெளியுறவுத் துறை மற்றும் தமிழக அரசு இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாகப்பட்டினம் துறைமுக கால்வாய் தூர்வாருதல், பயணியர் முனையம் அமைப்பது போன்ற பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் விரைவு பயணியர் கப்பல் போக்குவரத்தை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

Story image

பயணியர் கப்பல் பயணம், வெளிநாட்டு பயணம் என்பதால் மத்திய அரசின் தொழிற்துறை பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கையாள வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்று வரும் பணிகள் அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் நிறைவு பெற்று, அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் மத்திய அரசு அனுமதியுடன் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் வரலாற்று சிறப்புமிக்க கப்பல் போக்குவரத்தால் இலங்கை மற்றும் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி பெறுவதுடன் இரு நாட்டிற்கு இடையே நல்லுறவு ஏற்படும் என்றார்.

Story image

ஆய்வின்போது நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான கெளதமன், தட்கோ தலைவர் மதிவாணன், சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி, துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.