/

எங்கே செல்லும் இந்தப்பாதை? மாணவியை வன்கொடுமை செய்த பள்ளி மாணவர்கள்

திருவள்ளூரில் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு மாணவியை, அதேப்பள்ளியில் 9, 10ஆம் வகுப்பு பயிலும் மூன்று மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 2:57 am

ENS


சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு மாணவியை, அதேப்பள்ளியில் 9, 10ஆம் வகுப்பு பயிலும் மூன்று மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மூன்று மாணவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த நிலையில், சிறார் நீதிமன்ற வாரியம் முன்பு நிறுத்தப்பட்ட மூன்று மாணவர்களுக்கும் நல்வழிக்கான ஆலோசனை வழங்கி அனுப்பப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து காவல்துறையினர் குறிப்பிட்டிருப்பதாவது, பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவியை, ஆகஸ்ட் 2ஆம் தேதி மூன்று மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து மாணவி ஆசிரியரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து மாணவி ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆம் தேதிகளிலும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தொடர்ந்து வயிற்றுவலி என்று மாணவி கூறியதால், அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில், மருத்துவர்களிடம் நடந்ததை மாணவி கூறியுள்ளார். உடனடியாக மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதில், வன்கொடுமை உறுதி செய்யப்பட்டது.

அடுத்த நாளே, மாணவர்கள் மீது போக்சோ வழக்கில் குற்றம் பதிவு செய்யப்பட்டது. காவல்துறை பாதுகாப்பில் மாணவர்கள் எடுக்கப்பட்டனர். அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. பிறகு சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் சிறுவர்கள் என்பதால், வெறும் ஆலோசனையும் அறிவுரையும் வழங்கி அனுப்பிவைக்கப்பட்டனர். இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் பேசவிருக்கிறோம் என்று மூத்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.