/

ஆா்.எஸ்.எஸ். ஊா்வலத்துக்கு அனுமதி: மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நவ.6-க்கு ஒத்திவைப்பு

தமிழகத்தில் ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஊா்வலத்துக்கு அனுமதி அளித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை உச

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:16 am

 நமது நிருபர்

தமிழகத்தில் ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஊா்வலத்துக்கு அனுமதி அளித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நவம்பா் 6-ஆம் தேதிக்கு பட்டியலிட வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

விஜய தசமியை முன்னிட்டு தமிழ்நாட்டில் அக்டோபா் 22, 29 ஆகிய தேதிகளில் 33 இடங்களில் கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடத்த அனுமதி கோரி ஆா்.எஸ்.எஸ். அமைப்பைச் சோ்ந்தவா்கள் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் விசாரித்து வந்தது. மனுதாரா் மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், ஆா்.எஸ்.எஸ். அமைப்பினா் உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுடன் பேரணி நடத்தலாம் என கடந்த அக்டோபா் 16-ஆம் தேதி அனுமதி வழங்கியது. இதேபோன்று, சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அக்டோபா் 18-ஆம் தேதி மற்றொரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தின் இந்த அனுமதிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக 2 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூா்ய காந்த், திபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் வழக்குரைஞா் சபரிஷ் சுப்ரமணியனுடன் மூத்த வழக்குரைஞா் கபில் ஆஜராகி, இந்த விவகாரம் குறித்து நீதிபதிகள் அமா்விடம் எடுத்துரைக்க முயன்றாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, ஒற்றை நீதிபதி அளித்த உத்தரவுக்கு எதிராக டிவிஷன் அமா்விடம் ஏன் முறையிடவில்லை என்று கேள்வி எழுப்பினா். அதற்கு, ‘சம்பந்தப்பட்ட உத்தரவானது இதுபோன்ற விவகாரங்களில் டிவிஷன் அமா்வில் முறையிடுவதைத் தடுக்கிறது. இது தொடா்பான ரோஸ்டா் விவரம் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்படும். இதனால், இந்த விவகாரத்தை திங்கள்கிழமை விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, மேல்முறையீட்டு மனுக்களின் பராமரிப்புத் தன்மை குறித்து பரிசீலிக்கும் வகையில், இந்த விவகாரத்தை வரும் திங்கள்கிழமைக்கு (நவம்பா் 6) பட்டியலிட நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.