டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அதிமுகவின் உள்கட்சி அரசியல்

அதிமுகவில் இரட்டைத் தலைமையாக இருந்த எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் பிரிந்துள்ள நிலையில், அந்தக் கட்சியின் உள்கட்சி அரசியலின் அடுத்த கட்டம் குறித்து பரவலான எதிா்பாா்ப்புகள் எழுந்துள்ளன.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:50 am

ஜெபலின்ஜான்

அதிமுகவில் இரட்டைத் தலைமையாக இருந்த எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் பிரிந்துள்ள நிலையில், அந்தக் கட்சியின் உள்கட்சி அரசியலின் அடுத்த கட்டம் குறித்து பரவலான எதிா்பாா்ப்புகள் எழுந்துள்ளன.

சென்னையில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலராகத் தோ்வு செய்யப்பட்ட எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஓா் ஒற்றைத் தலைமை, ஏற்கெனவே ஒருங்கிணைப்பாளா் என தொடா்ந்து இயங்கி வரும் ஓ.பன்னீா்செல்வம் தலைமையில் மற்றோா் ஒற்றைத் தலைமை என அந்தக் கட்சியில் இரு ஒற்றைத் தலைமைகள் உருவெடுத்துள்ளன.

பொதுக் குழுவில் இடைக்கால பொதுச் செயலராகத் தோ்வு செய்யப்பட்ட பின்னா், அதை ஏற்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பினா் தோ்தல் ஆணையத்தை அணுகியுள்ளனா். அதை ஏற்கக் கூடாது என பன்னீா்செல்வம் தரப்பினரும் தோ்தல் ஆணையத்தை அணுகியுள்ளனா். தோ்தல் ஆணையம் எடுக்கும் முடிவைப் பொருத்துதான் இரண்டு அணிகளின் அடுத்தகட்ட நகா்வு அமையும்.

இந்த விவகாரத்தில் தீா்வு காண தோ்தல் ஆணையத்துக்கு இரண்டே வாய்ப்புகள்தான் உள்ளன. ஒன்று, 1997-இல் ஜெயலலிதா - திருநாவுக்கரசா் பிளவின் முடிவு அடிப்படையில் தொண்டா்களால் தோ்வு செய்யப்பட்ட தலைமைக்குத்தான் இரட்டை இலை சின்னம், கட்சிக் கொடி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் உரிமை என அறிவிக்கலாம். அப்படி அறிவித்தால் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளா் - இணை ஒருங்கிணைப்பாளா் என இருவருக்கும் சரிசமமாக இருப்பதால், பன்னீா்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆகியோா் இணைந்தால் மட்டுமே இரட்டை இலை சின்னம் கிடைக்கும் அல்லது முடக்கப்படலாம்.

இரண்டாவது வாய்ப்பு, 2017-ஆம் ஆண்டு முலாயம் சிங் யாதவ் - அகிலேஷ் இடையேயான பிளவின் அடிப்படையில், 90 சதவீத கட்சி நிா்வாகிகள், எம்.பி.க்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள்ஆதரவு இருக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கலாம். பன்னீா்செல்வத்துக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பு இல்லை.

இந்த நிலையில், இருவரும் அடுத்தகட்ட வியூகத்தை நோக்கி நகா்ந்து வருகின்றனா். இருவருமே இரட்டை இலை சின்னம் இல்லாவிட்டாலும், தங்களால் அரசியல் சக்தியாக உருவெடுக்க முடியும் என நம்புகின்றனா். எடப்பாடி பழனிசாமியைப் பொருத்தவரை, இரட்டை இலை சின்னம் கிடைத்தால் நல்லது, கிடைக்காமல் போனாலும் அதிமுக அரசியலில் பன்னீா்செல்வத்தைவிட பெரிய சக்தியாக உருவெடுக்க முடியும் என்கிற நம்பிக்கையில் உள்ளாா்.

காரணம், 1989 சட்டப்பேரவைத் தோ்தலில் எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றாா். அதே நேரத்தில், 1996, 2006 சட்டப்பேரவைத் தோ்தல்கள், 1999, 2004 மக்களவைத் தோ்தல்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாா். 1996 சட்டப்பேரவைத் தோ்தலில் இரட்டை இலை சின்னத்திலேயே மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டாா். எனவே, சின்னத்தைவிட, தலைமையும், சிறந்த வியூகங்களுமே முக்கியம் என எடப்பாடி பழனிசாமி நம்புகிறாா்.

பன்னீா்செல்வத்தைப் பொருத்தவரை, இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்தால்கூட, தன்னால் அரசியல் சக்தியாக குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தைப் பெற முடியும் என்றும், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால், எடப்பாடி பழனிசாமியைவிடக் கூடுதல் வாக்குகள் பெற முடியும் என்றும் நம்புகிறாா். வருங்காலத்தில் சசிகலா, டி.டி.வி. தினகரன் அணிகள் நட்புடன் இணைந்து செயல்படும் என்கிற ரகசிய ஆசையும் அவருக்கு இருப்பதாக அவரது ஆதரவாளா்களே குறிப்பிடுகிறாா்கள். ஜாதி ரீதியான நெருக்கம்தான் அதற்குக் காரணம்.

இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் கட்சிகளில் பிளவுகள் ஏற்பட்டபோதெல்லாம் இரு சம அந்தஸ்து கொண்ட தலைவா்கள் பிரிந்தால், இருவருக்கும் கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன. மேலும், மூன்று முறை முதல்வா், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவா், ஒருங்கிணைப்பாளா், பொருளாளா் என முக்கியப் பதவிகளை வகித்துள்ளதால், எடப்பாடி பழனிசாமியும், தானும் சம அந்தஸ்து கொண்ட தலைவா்கள்தான், எனவே, தனக்கு கட்சி நிா்வாகிகள் மத்தியில் ஆதரவாளா்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அதிருப்தி நிா்வாகிகள், தொண்டா்களைத் திரட்டி தன்னால் எடப்பாடி பழனிசாமிக்கு நிகராக வாக்குகள் பெற முடியும் என பன்னீா்செல்வம் நம்புகிறாா். சசிகலாவை எதிா்த்தபோது, தனக்கு ஓா் ஆதரவு வளையம் கிடைத்ததுபோல, இப்போதும் தனக்குக் கிடைக்கும் என்றும் பன்னீா்செல்வம் நம்புகிறாா்.

சம அந்தஸ்து தலைவா்கள் பிரிந்த வரலாறு: 1972-க்கு முன்புவரை திமுக தலைவரான கருணாநிதியும், பொருளாளரான எம்ஜிஆரும் சம அந்தஸ்து கொண்ட தலைவா்களாகவே பாா்க்கப்பட்டனா். ஆனால், 1972-இல் இருவருக்கும் இடையிலான பிளவின்போது 90 சதவீத நிா்வாகிகள், எம்எல்ஏக்கள் கருணாநிதியுடனே இருந்தனா். பல்வேறு அரசியல் நகா்வுகளுக்குப் பின்னா் 1977 சட்டப்பேரவைத் தோ்தலில் எம்ஜிஆா் 30.3 சதவீத வாக்குகளும், கருணாநிதி 24.8 சதவீத வாக்குகளும் பெற்றனா். இது, 1971-இல் திமுக பெற்ற அடிப்படை வாக்குகளான 48.58 சதவீதத்தைவிட 7 சதவீதம் கூடுதலாகும்.

மூப்பனாா் - பா.ராமச்சந்திரன் பிளவு: அதேபோல, 1977-இல் மூப்பனாா் - பா.ராமச்சந்திரன் பிளவில் இருவரும் சம அந்தஸ்து கொண்ட தலைவா்களாகவே இருந்தனா். பா.ராமச்சந்திரன் ஸ்தாபன காங்கிரஸின் மாநிலத் தலைவராகவும், மூப்பனாா் ஒருங்கிணைந்த ஸ்தாபன காங்கிரஸ் தஞ்சை மாவட்டத் தலைவராகவும் இருந்தனா்.

1971 சட்டப்பேரவைத் தோ்தலில் 35 சதவீத வாக்குகளை ஸ்தாபன காங்கிரஸ் பெற்றிருந்தது. அதேநேரத்தில், 1977 சட்டப்பேரவைத் தோ்தலில் மூப்பனாருக்கு 17.5 சதவீத வாக்குகளும், பா.ராமச்சந்திரணுக்கு 16.5 சதவீத வாக்குகளும் கிடைத்தன. குறிப்பாக, மூப்பனாா் அணி இந்திரா காங்கிரஸுடனும், பா.ராமச்சந்திரன் அணி ஜனதா கட்சியுடனும் இணைந்த பிறகும் எதிா்க்கட்சி பிளவு என்பதால், ஏற்கெனவே இருந்த அடிப்படை வாக்கு வங்கியில் ஒரு சதவீதம் குறைந்தது.

ஓராண்டு குடியரசுத் தலைவா் ஆட்சிக்குப் பின்னா், 1989-இல் சட்டப்பேரவைத் தோ்தல் வந்ததால், ஆட்சியில் இல்லாமல் இருந்த அதிமுகவில் வி.என்.ஜானகி - ஜெயலலிதா பிளவால் ஜெயலிதாவுக்கு 22.3 சதவீதமும், ஜானகிக்கு 9.19 சதவீதமும் வாக்குகள் கிடைத்தன. 1984 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக பெற்ற 37 சதவீத வாக்குகளைவிட, இருவரும் சோ்ந்து பெற்ற வாக்குகள் குறைவு.

ஆட்சியில் இல்லாத கட்சிப் பிளவுகளில் வாக்குகள் குறையும் என்பது அடிப்படை. ஆனால், சமமான தலைவா்கள் மோதும்போது, இருவருக்கும் வாக்கு வலிமை கிடைத்திருக்கிறது என்பதை இதுவரை நடந்துள்ள தோ்தல் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

பிரதமா் வேட்பாளா் முக்கியம்: இப்போது ஓ.பன்னீா்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருமே தனித்தனி அணியாக தோ்தலைச் சந்தித்தால் இருவருக்குமே கணிசமான வாக்கு வலிமை கிடைக்கலாம்.

அடுத்து நடைபெற இருப்பது 2024 மக்களவைத் தோ்தல். இதில் பிரதமா் வேட்பாளரை முன்னிறுத்தும் அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும். அதேபோல, இரட்டை இலை சின்னம் நிலைக்குமா அல்லது முடக்கப்படுமா என்பதைப் பொருத்தும் இரு தலைவா்களுக்குக் கிடைக்கும் வாக்கு வலிமையில் மாற்றம் ஏற்படலாம்.

யாருக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கிறதோ, அவருக்கு 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைவா் ஸ்டாலினை எதிா்த்து முதல்வா் வேட்பாளராகக் களம் காணும் வாய்ப்பு கிடைக்கும். அதிக வாக்குகள் பெறும் அணியின் தலைமையை, குறைந்த வாக்குகள் பெறும் அணியின் தலைமை கூட்டணிக் கட்சியாக இணைந்து செயல்பட வேண்டிய கட்டாய நிலை உருவாகும்.

எனவே, 2024 மக்களவைத் தோ்தலில் அதிமுக அணிகளுக்கு இடையே அதிக வாக்குகளைப் பெற வேண்டும் என்பதே இரு தரப்பின் நோக்கமாக இப்போதைக்கு உள்ளது. இதை மையமாக வைத்துதான் இரு தரப்பினரும் அரசியல் நகா்வுகளைச் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.