கடலோரத்தில் மீனவக் குப்பம் இருக்கக் கூடாதென்றால் சொகுசு பங்களாக்கள் வந்தது எப்படி?
கடற்கரை மண்டல ஒழுங்குமுறை விதிகளை மீறும் வகையில், கடலோரம் அமைந்துள்ள சொகுசு பங்களாக்களுக்கு அருகே சிறிய அளவில் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.


சென்னை: கடற்கரை மண்டல ஒழுங்குமுறை விதிகளை மீறும் வகையில், கடலோரம் அமைந்துள்ள சொகுசு பங்களாக்களுக்கு அருகே சிறிய அளவில் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், சில சமயங்களில் கடல் அலைகள் சொகுசு விடுதிகளின் சுற்றுச்சுவரை தாண்டி விடுகின்றன. இதனால், கடல் அரிப்பு ஏற்பட்டு சொகுசு விடுதிக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, வீட்டின் உரிமையாளர்கள் ஏராளமான பாறைக் கற்களைக் கொண்டு வந்து கொட்டி சிறிய சுவரை எழுப்பியுள்ளனர்.
இது கடற்கரை மண்டல ஒழுங்குமுறை விதிகளுக்கு எதிரானது என்று கூறப்படுகிறது.
இந்த சொகுசு வீடுகள் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்காடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு அருகே கட்டப்பட்டுள்ளன. இவை கடலில் இருந்து வெறும் 20-30 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன.
இதுபோன்ற வீடுகள், கடற்கரை மண்டல ஒழுங்குமுறை விதிக்கு எதிரானது என்று கூறி மகாபலிபுரம் உள்ளூர் திட்ட அதிகாரிகளால் பூட்டில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இதுபோன்ற சில வீடுகளில் விரிசல்கள் விட்டுள்ளன. சில விடுகளின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துவிட்டன. எனவே, அதுபோன்ற அசம்பாவிதத்தைத் தவிர்க்க, வீட்டு உரிமையாளர் இப்படி பாறைக் கற்களைக் கொட்டியுள்ளார். இதுவும் விதிமீறலே.
இது குறித்து கரிக்காட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கூறுகையில், 2004ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபிறகு, பாதுகாப்பு நடவடிக்கையாக, மீனவக் குப்பங்களை கடலோரத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மாற்றும்படி உத்தரவிட்ட அதிகாரிகள், இப்போது இந்த சொகுசு பங்களாக்களை கட்ட எப்படி அனுமதித்தார்கள்?
சொகுசு பங்களாக்களை கடல் தாக்காமல் இருக்க பாறைக் கற்களைக் கொட்டியிருக்கிறார்கள். இதனால் கடல் அதிகமாக அரிக்கப்படும். இதுபோன்ற பாறைக் கற்களில், அதிக காற்றின் போது மீனவப் படகுகள் மோதி சேதமடையும். மீனவர்கள் தங்களது படகுகளை கரை சேர்க்கும் பகுதிகளில் இப்படி பாறைக் கற்களை கொட்டியிருப்பதை யார் தட்டிக்கேட்பது? என்கிறார்கள்.
இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறுகையில், மீனவர்கள் சொல்லித்தான், பாறைக் கற்கள் கொட்டப்பட்டது குறித்து தெரிய வந்தது. எந்த அனுமதியும் பெறாமல், வீட்டின் உரிமையாளர்கள் இதனை செய்துள்ளனர். கடலோர காவல்படையும் இது குறித்து தெரிவிக்கவில்லை. நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி தாதில்தாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...