/

நண்பனின் அஞ்சலி போஸ்டருக்கு அருகே இடம்பிடித்த ஸ்டெர்லைட் போராளி: கண்ணீர் கதை

ஸ்டெர்லைட்டினால் ஏற்பட்ட மாசுபாடு காரணமாக கண் புற்றுநோய் பாதித்து உயிரிழந்த நண்பரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுத் திரும்பிய மணிராஜ் சில மணி நேரங்களில் சடலமான சம்பவம் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

News image
Updated On :26 மே 2018, 7:11 am


தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டினால் ஏற்பட்ட மாசுபாடு காரணமாக கண் புற்றுநோய் பாதித்து உயிரிழந்த நண்பரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுத் திரும்பிய மணிராஜ் சில மணி நேரங்களில் சடலமான சம்பவம் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தாமோதரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிராஜ் (35). கண் புற்றுநோய் பாதித்து கடந்த 21ம் தேதி உயிரிழந்த தங்கதுரையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு, வீடு திரும்பிய மணிராஜ், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் குண்டடி பட்டு அடுத்த சில மணி நேரங்களில் பிணமானார்.

செவ்வாயன்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரில் மணிராஜும் ஒருவர். 3 மாதங்களுக்கு முன்புதான் மணிராஜுக்குத் திருமணமானது. அவரது மனைவி அனுசுயா தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். தனக்கு ஏற்பட்ட இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பல முறை மயங்கி விழுந்துவிடுகிறார் அனுசுயா.

பிரியன்ட் நகரில் எலக்ட்ரிகல் கேட்ஜெட் கடை நடத்தி வந்துள்ளார் மணிராஜ். சிறிய வேலையாக இருந்தாலும் அதை செய்ய தயங்க மாட்டார். எப்போதும் வேலை வேலை என்று ஓடுபவர். தங்கராஜின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பிறகு வீட்டுக்கு வந்த மணிராஜ், போராட்டம் குறித்து நண்பர்கள் சொன்னதும் வீட்டை விட்டுக் கிளம்பினார். சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்துவிட்டதாக அவரது நண்பரிடம் இருந்து தகவல் வந்ததாகக் கூறுகிறார் மூத்த சகோதரர் ஜெயக்குமார்.

மணிராஜின் மரணம் குறித்து இளைய சகோதரர் ரமேஷ் கண்ணன் (31) கூறுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் மரணம் என்று தொலைக்காட்சிச் செய்திகளில் நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். பிறகுதான், எங்களுக்குத் தெரிந்தது மரணித்தவர்களில் என் அண்ணன் மணிராஜும் ஒருவர் என்று எனக் கூறி கண் கலங்குகிறார்.

மணிராஜின் உடலைப் பார்க்க தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த குடும்பத்தினரும், காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளனர். மணிராஜின் உடலைப் பார்க்க காத்திருந்த போது, காவல்துறையினர் எங்கள் மீதும் தடியடி நடத்தினார்கள் என்கிறார் ஜெயக்குமார்.

21ம் தேதி உயிரிழந்த தங்கதுரையின் கண்ணீர் அஞ்சலி போஸ்டருக்கு அருகே, 22ம் தேதி துப்பாக்கிச் சூட்டில் வீர மரணம் அடைந்த மணிராஜின் வருந்துகிறோம் போஸ்டர் ஒட்டப்பட்டதைப் பார்த்த கிராம மக்கள் கண்ணீர் விட்டு கதறினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.