தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் உதவித் தலைமையாசிரியர் பதவியை பெண் ஆசிரியர்கள் தவிர்த்து வருவதால், தலைமையாசிரியராக பதவி உயர்வு பெறும்போது அவர்கள் சிறப்பாக பணிபுரிய முடியாமல் தடுமாறும் நிலை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 35,631 தலைமையாசிரியர் பணியிடங்கள் உள்ளன. இதில், 750 மாணவர்கள் படிக்கும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு மட்டுமே உதவித் தலைமையாசிரியர் பணியிடம் வழங்கப்படுகிறது. உதவித் தலைமையாசிரியர் பணியிடத்திற்கு மாத ஊதியத்துடன் ரூ.50 மட்டுமே சேர்த்து வழங்கப்படுகிறது. 750 மாணவர்களில் ஒருவர் குறைந்தாலும், அந்தப் பள்ளிக்கு உதவித் தலைமையாசிரியர் பதவி வழங்கப்படுவதில்லை. மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும்பட்சத்தில், இடை நிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மூத்த ஆசிரியர் என்றே அழைக்கப்பட வேண்டும்.
தலைமையாசிரியர்களுக்கு வாரம் 10 பாட வேளை வழங்கப்படுவதைப் போல், உதவித் தலைமையாசிரியர்களுக்கு 14 பாட வேளை என்பது விதிமுறை. தமிழகம் முழுவதுமுள்ளஅரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், உதவித் தலைமையாசிரியர் பணியிடத்திற்கு தகுதியிருந்தும் பெரும்பாலான பெண் ஆசிரியர்கள் விருப்பம் காட்டுவதில்லை. சில இடங்களில் ஆர்வத்துடன் முன்வரும் பெண் ஆசிரியர்களை, நிர்வாகத்தை சிறப்பாக மேற்கொள்ள முடியாது எனக் கூறி சக ஆசிரியர்களே தடுத்து நிறுத்தி விடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், பதவி மூப்பு அடிப்படையில் 4ஆவது, 6ஆவது இடங்களில் இருக்கும் ஆண் ஆசிரியர்கள் அந்த பதவியை பெற்றுக் கொள்கின்றனர்.
அதுபோல் உதவித் தலைமையாசிரியர் பதவிக்கு வரும் ஆண் ஆசிரியர்கள் பலர், பள்ளியில் உள்ள அலுவலக உதவியாளர், ஆய்வக உதவியாளர் செய்ய வேண்டிய பணிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். குறிப்பாக மாத சம்பளப் பட்டியல் தயாரிப்பு, ஊதியம், ஈட்டிய விடுப்பு மற்றும் ஊக்க ஊதியம் பெறுவதற்கு கருவூலம் செல்வது, பள்ளி நிர்வாகப் பணி, விழா நடத்துதல் போன்ற பணிகளை செய்துவிட்டு, ஆசிரியரின் அடிப்படை பொறுப்பான கற்பித்தல் பணியை மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் அதிகரித்து வருகிறது.
இதனால், பள்ளியில் வேலை செய்ய வேண்டிய அலுவலக உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர்கள், தலைமையாசிரியரின் சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றனர்.
இதுபோன்ற காரணத்தால், பதவி உயர்வு பெற்று தலைமையாசிரியர் பணியிடத்திற்கு வரும் பெண் ஆசிரியர்கள், முறையான அனுபவம் இல்லாமல் தடுமாறும் நிலை உள்ளது. அதனால், உதவித் தலைமையாசிரியர்களாக உள்ள ஆண்களிடமே அனைத்துப் பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு, பெயரளவுக்கு தலைமையாசிரியராக பணியாற்ற வேண்டிய நிலை பெண் ஆசிரியர்களுக்கு ஏற்படுகிறது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: உதவித் தலைமையாசிரியர் பணியிடத்திற்கு தகுதியான மூத்த பெண் ஆசிரியர்களிடம், அந்த பொறுப்பு வேண்டாம் என நிர்ப்பந்தம் செய்து ஒப்புதல் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்று எழுதிக் கொடுக்கும் பெண் ஆசிரியர்களின் பெயர்களை, பணிப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். தலைமையாசிரியருக்கான பதவி உயர்வு பட்டியலிலும் அந்த பெண் ஆசிரியர்களை சேர்க்கக் கூடாது. இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலமே, உதவித் தலைமையாசிரியர் பொறுப்பிலிருந்து பெண் ஆசிரியர்கள் விலகிச் செல்வதை தடுக்க முடியும். அதன் மூலம், நிர்வாகத் திறமை மிக்க தலைமையாசிரியர்களாக பெண் ஆசிரியர்களை உருவாக முடியும் என்றார்.