கடந்த 2016-17 நிதி ஆண்டில், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மானியம் வழங்க குறுவை சாகுபடிக்கு ரூ.56 கோடியும், சம்பா சாகுபடிக்கு ரூ.80 கோடிக்கு கூடுதலாகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. உழவு, நடவு, இடுபொருள், நீர் கடத்தும் குழாய் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மானியம் மூலம் விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதாக கூறப்பட்டது. ஆனால், மானியத்தை நம்பி களம் இறங்கிய விவசாயிகளுக்கு வறட்சியால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
உள்ளூர் விவசாயிகள் மற்றும் வேளாண்மை அலுவலர்களின் கருத்தை கேட்காமல், மானியம் வழங்கினால் எதையும் சாதிக்கலாம் என திட்டமிட்ட உயரதிகாரிகளால், டெல்டா பகுதியின் வேளாண்மை கேள்விக்குறியானது. அதிலிருந்தும் பாடம் கற்க தவறிய உயரதிகாரிகள், தற்போது கரும்பு சாகுபடிக்கு 30ஆயிரம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயித்து களம் இறங்கியுள்ளனர். இலக்கை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் வேளாண்மை மற்றும் சர்க்கரை ஆலை அலுவலர்களுக்கு இருந்தாலும், இறுதி பாதிப்பை சந்திப்பது விவசாயிகள் தான் என்கின்றனர் விவசாய சங்க நிர்வாகிகள்.