மதுரையில் "காணாமல்போன' கண்மாய்கள்!
மதுரையில் கடந்த 20 ஆண்டுகளாக பெரும்பாலான கண்மாய்கள் கட்டடங்களாகவும், கழிவுநீர் தேங்குமிடங்களாகவும் மாற்றப்பட்டதால் மாநகராட்சிப் பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது


மதுரையில் கடந்த 20 ஆண்டுகளாக பெரும்பாலான கண்மாய்கள் கட்டடங்களாகவும், கழிவுநீர் தேங்குமிடங்களாகவும் மாற்றப்பட்டதால் மாநகராட்சிப் பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மதுரை மாநகரானது பாரம்பரிய கலை நகராக மட்டுமின்றி, அறிவியல் முறைப்படி இயற்கை பாதுகாப்பான நகராகவும் விளங்குவதாக புவியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மலைக் குன்றுகள் சூழவும், வைகை ஆறு மட்டுமின்றி, சுமார் 50-க்கும் மேற்பட்ட நீர்த் தேக்கமாக விளங்கும் கண்மாய்கள் சூழந்ததாகவும் இயற்கையிலேயே அமைந்த நகராகவும் விளங்கியது.
மதுரை நகரில் மீனாட்சி சுந்தரேசுவரர், கூடலழகர் பெருமாள், இம்மையில் நன்மை தருவார் கோயில், தல்லாகுளம் பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் தெப்பக்குளம் அமைக்கப்பட்டு தண்ணீர் தேக்கப்பட்டதுடன், பெரியார் பேருந்து நிலையம் அருகே இருந்த வலைவீசித் தெப்பம், எல்லீஸ்நகர் கண்மாய் (தற்போதைய வ.உ.சி.பாலம்) உள்ளிட்ட நீர்த் தேக்கங்களும் இருந்தன. சிறிய நீர்த் தேக்கங்களைத் தவிர்த்து 38 கண்மாய்கள் மடைதிறப்பு வசதியுடன் இருந்தன.
பழைய கண்மாய்களில் தற்போது விளாங்குடி, கரிசல்குளம், மாடக்குளம் கண்மாய்கள் மட்டுமே முழு விவசாயப் பயன்பாட்டுக்குரியதாக உள்ளன. சம்பந்தர் ஆலங்குளம், திரயாத்தி, நாராயணபுரம், நாகனாகுளம் ஆகியவை மட்டுமே தற்போது நீர் தேக்கும் வகையில் உள்ளன. அவற்றில் நாராயணபுரம் கண்மாய் பாதியளவு கழிவு நீர் தேங்கியுள்ளது.
முடக்கத்தான், ஆத்திகுளம், அனுப்பானடி சிறிய, பெரிய கண்மாய்கள், சிந்தாமணி, தூளிபத்தி, ஐவத்தான், விரகனூர், அயன்பாப்பாகுடி, ஐராவதநல்லூர் ஆகிய கண்மாய்கள் கழிவு நீர்த் தேக்கமாகவும், குடியிருப்புகள் கட்டப்பட்டும் உள்ளன. அவனியாபுரம் கண்மாய் மதுரை மாநகராட்சி திடக்கழிவு கிடங்காகவும், வில்லாபுரம் கண்மாய் முழுமையான குடியிருப்பாகவும் மாறியுள்ளன.
தல்லாகுளம் கண்மாயானது மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்கா, உலகத் தமிழ்ச்சங்கம் போன்றவை அமைக்கப்பட்ட நிலையில் அதிலிருந்த மதகு காட்சிப்பொருளாகிவிட்டது.
இதே நிலைதான் அனைத்து கண்மாய்களுக்கும் ஏற்பட்டுள்ளது. மழை அதிகமாகப் பெய்யும் போது அவற்றை தேக்கும் வகையிலே அதிகப்படியான கண்மாய்களை நீர் தேக்கங்களாக அமைத்துள்ளனர். அதனடிப்படையில் மதுரையில் இருந்த பழைய கண்மாய்களில் தேக்கப்படும் தண்ணீரானது வைகை அணையில் தேக்கப்படும் தண்ணீரைவிட பல மடங்கு அதிகமாகவே இருந்தது என்கிறார் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சம்மேளன மாநிலக் கெளரவத் தலைவர் கே.கே.என். ராஜன்.
தற்போது 2017 வடகிழக்கு பருவமழையில் மதுரையில் மாதம் சராசரியாக 250 மில்லி மீட்டருக்கும் குறைவாகவே மழை பெய்துள்ளது. தற்போது தொடங்கிய தென்மேற்குப் பருவமழையிலும் குறிப்பிடும்படியான மழை பெய்யவில்லை. பெய்யும் மழை நீரை சேமிக்க மாநகராட்சி நிர்வாகமும், மக்களும் அக்கறை செலுத்தவில்லை.
எனவே வரும் ஆண்டுகளில் மதுரை மாநகராட்சியில் தண்ணீர் பற்றாக்குறை என்பது தவிர்க்கமுடியாததாகிவிட்டது என கவலை தெரிவிக்கும் பொதுப்பணித்துறையினர், கழிவு நீர்த் தேக்கமான கண்மாய்களை மீண்டும் மழை நீர்த் தேக்கமாக மாற்றினால் மட்டுமே தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...