வேகமாக குறைந்து வரும் நீர்வளம்: என்ன செய்யப் போகிறது தமிழகம்? விரிவான அலசல்
தமிழகத்தை கடந்த ஆண்டு ஏமாற்றிய பருவ மழை காரணமாக, நீர்வளம் வேகமாகக் குறைந்து வருகிறது. வரும் கோடையை தமிழகம் எப்படி சமாளிக்கப் போகிறது என்பது பெரும் சவாலான கேள்வியாக உள்ளது.


சென்னை: தமிழகத்தை கடந்த ஆண்டு ஏமாற்றிய பருவ மழை காரணமாக, நீர்வளம் வேகமாகக் குறைந்து வருகிறது. வரும் கோடையை தமிழகம் எப்படி சமாளிக்கப் போகிறது என்பது பெரும் சவாலான கேள்வியாக உள்ளது.
கோடைக் காலம் முழு வீச்சில் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் இருக்கும் பல நீர் ஆதாரங்கள் எலும்புக் கூடாகிவிட்டிருக்கிறது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் செய்தியாளர் நிருபமா விஸ்வநாதன் தமிழகத்தின் தற்போதைய நீர் இருப்புக் குறித்து தொகுத்துள்ள தகவல் தமிழர்களை நிலைகுலையச் செய்துள்ளது.
ஆழ்குழாய் கிணறுகள், விவசாய கிணறுகள் மற்றும் என்எல்சி சுரங்கங்களில் இருந்து எடுத்து கொண்டு வரப்படும் தண்ணீர் சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. ஆனால், மற்ற மாவட்டங்களின் நிலை பரிதாபம். கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பருவ மழை பொய்த்ததால் ஏற்பட்ட வறட்சி தமிழகம் முழுவதும் ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கிவிட்டது.
மதுரை மற்றும் 3 தெற்கு மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் வைகையில் தற்போது சில வாரங்களுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. தருமபுரியில் உள்ள 74 குளங்களும் வற்றி விட்டதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
திருப்பூர்வ மாவட்டம் அமராவதி அணைக்கட்டில் தற்போதிருக்கும் தண்ணீர் 3 வாரங்களுக்கு மட்டுமே போதுமானது. காவிரி குடிநீர் திட்டத்தை மட்டுமே நம்பியிருக்கும் காங்கேயம் மற்றும் வெள்ளக்கோயில் நகராட்சிகளுக்கு, இரண்டு வாரங்களுக்கு முன்பே தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்டது.
திண்டுக்கல் தெற்குப் பகுதியில் தற்போதே வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் கொடைக்கானல் பகுதியில் இரவு நேரங்களில் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், கோடைக் காலத்தில் வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று அஞ்சப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் கொடுமுடியில் நிலத்தடி நீர் மட்டம் 15 அடி ஆழத்துக்கும் கீழே சென்றுவிட்டது. இங்கு 10 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதே மாவட்டத்தின் வள்ளியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பஞ்சாயத்துப் பகுதிகளில் ஒரு குடம் தண்ணீர் 5 முதல் 10 ரூபாய் வரை (தண்ணீரின் தரத்துக்கு ஏற்ற வகையில்) விற்கப்படுகிறது.
2015ம் ஆண்டு கடும் மழை வெள்ளத்தில் மிதந்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், 2016ம் ஆண்டு பெய்யாத பருவ மழையால் தண்ணீரின்றி கவலையில் மிதக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...