/

இலங்கையில் சீனா நிலைகொண்டிருக்கும் வரையில் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும் : வைகோ

இலங்கையில் சீனா நிலைகொண்டிருக்கும் வரையில் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

News image
மாநாட்டில் பேசுகிறார் மதிமுக கட்சி பொதுச் செயலர் வைகோ. உடன் (இடமிருந்து) புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன், கவிஞர் காசி ஆனந்தன்.
Updated On :29 ஜனவரி 2024, 4:36 pm

DIN

இலங்கையில் சீனா நிலைகொண்டிருக்கும் வரையில் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
இந்திய}ஈழத்தமிழர் நட்புறவு மையம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை போரூரில் 'தமிழீழம் தமிழர் தாயகம்" என்ற மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், "புதிய பார்வை' ஆசிரியர் ம.நடராசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமமாவளவன், நீதிபதி அரிபரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் வைகோ பேசியது: இலங்கையில் அம்பந்தோட்டாவில் சீனா நிலைகொண்டிருக்கும் வரையில் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும். தெற்கில் தமிழர்கள் வலுவாக இருந்தால் மட்டுமே இந்தியாவுக்கு அரணாக இருப்பார்கள். இந்தியாவின் ஆதரவு இருந்தால் மட்டுமே தமிழீழம் அமைக்க முடியும். தமிழீழம் அமைந்தால் மட்டுமே தமிழகத்திற்கு பாதுகாப்பு இருக்கும். இல்லை எனில் சீனா இலங்கை வழியாக முதலில் தமிழகத்தைத்தான் தாக்கும். இலங்கையில் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்துவதே சிறந்தத் தீர்வு. இதை இந்தியா ஐ.நா மன்றத்தில் வலியுறுத்த வேண்டும் என்றார் வைகோ.
பழ.நெடுமாறன் : மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, இலங்கையில் நடப்பது திட்டமிட்ட இனப்படுகொலை என்ற வார்த்தையை அன்றே பயன்படுத்தி இலங்கை அரசை எச்சரித்தார். சீனாவாலும், இலங்கையாலும் இந்தியாவிற்கு ஆபத்து இருக்கிறது. மத்திய அரசு ஈழ விடுதலைக்கு துணை நிற்பதன் மூலம் தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் பழ.நெடுமாறன்.
ம.நடராசன் : இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை தெளிவாக வகுக்க வேண்டும். தமிழீழம் அமைய வேண்டும் என்பது தற்போது உலகெங்கும் வாழும் தமிழர்களின் தாரக மந்திரமாக மாறியுள்ளது. நிச்சயம் தமிழீழம் வெல்லும் என்றார் நடராசன்.
தொல்.திருமாவளவன் : இன்றளவிலும் இலங்கையில் தமிழர்களின் அடையாளம், கட்டமைப்புகள், கோயில்கள் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றன. உலக ஏகாதிபத்திய அரசுகளால் மட்டுமே ஈழ விடுதலையை பெற்றுக் கொடுக்க முடியும். ஆனால் இந்த வல்லரசுகள் இலங்கையை தாங்கிப்பிடித்துக் கொண்டிருக்கின்றன. இந்திய அரசின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஈழ விடுதலை சாத்தியம் என்றார் திருமாவளவன்.
நீதிபதி து.அரிபரந்தாமன் : தமிழீழம் இந்திய ஆதரவு இருந்தால் மட்டுமே சாத்தியம். புலம்பெயர்ந்த தமிழர்கள், ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழக தமிழர்கள் என அனைவரும் ஒற்றுமையுடன் போராடி நம் உரிமையை வெல்ல வேண்டும் என்றார். இந்த மாநாட்டில் கவிஞர் மு.காசி ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.