முடங்கி வரும் மூங்கில் பொருட்கள் விற்பனை
பிளாஸ்டிக் பொருள்கள் வருகையால் பாரம்பரியமிக்க மூங்கில் பொருள்கள் நலிவடைந்து வருகின்றன. இதனால், மூங்கில் பொருட்கள் தயாரிப்பாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.


பிளாஸ்டிக் பொருள்கள் வருகையால் பாரம்பரியமிக்க மூங்கில் பொருள்கள் நலிவடைந்து வருகின்றன. இதனால், மூங்கில் பொருட்கள் தயாரிப்பாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஏழைகளின் மரம், பச்சை தங்கம் என்று அழைக்கப்படும் மூங்கிலின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்கிறது. மூங்கில் சார்ந்த பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.
மூங்கிலில் பலதரப்பட்ட கூடைகள் தயார் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் பல இடங்களில் இத்தொழில் மேற்கொள்ளப்பட்டாலும் தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் போன்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவில் இவை நடைபெறுகிறது. இத்தொழிலுக்கு நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது.
மூங்கிலை வெட்டி, சரமாக மாற்றி, சீவி வைத்துக் கொள்கின்றனர். பின்னர், அதைப் பயன்படுத்தி தக்காளி கூடை, மில் கூடை, செடிக் கூண்டு, உப்புக்கூடை, கஞ்சி வடிக்கும் கூடை, அப்பளத் தட்டு ஆகியவற்றைச் செய்கின்றனர். வீடுகள், நிறுவனங்களின் உள் அலங்காரத்துக்கும் (இன்டீரியர் டெக்ரேஷன்) மூங்கில்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில், காலமாற்றத்தால் நகர்புறம் மற்றும் கிராமங்களில் வீட்டு உபயோகத்துக்கும், விவசாய தொழிலுக்கும் பிளாஸ்டிக் கூடைகள் அண்மைக்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பிளாஸ்டிக் கூடைகள், மூங்கில் கூடைகளைவிட விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மலிவு விலையில் கிடைக்கும் பிளாஸ்டிக் கூடைகள் விற்பனை அதிகமாகி, மூங்கில் கூடை தயாரிப்பவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
இதுகுறித்து அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள மேலனிக்குடிக்காடு மலைக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவரும், கூடை தயாரிப்பவருமான பார்வதி கூறியது:

மூங்கில் பொருள்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.
"நான் சிறு வயதில் இருந்தே மூங்கில் தட்டு, முறம், கூடை, பெட்டு, ஜாடு, காய்கறிக் கூடை, தட்டுக்கூடை, பொட்டி கூடை, விசிறி போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்கிறேன்.
ஒரு மூங்கிலின் விலை ரூ. 500. அதைப் பொருட்களாகச் செய்தால் ரூ. 650 கிடைக்கும். அதாவது, ஒரு மூங்கிலுக்கு ரூ. 150 மட்டுமே கிடைக்கும். நாள் முழுக்க வேலை செய்தாலும் ரூ. 300 மட்டுமே கிடைக்கும்.
பனை ஓலை மூலம் செய்யப்படும் ஓலைப்பெட்டிகள் சிவராத்திரி போன்ற பூஜை காலங்களில் நல்ல விலை போகும். மூங்கில் சல்லடைகள், கோடை காலத்தில் மூங்கில் விசிறியும் செய்து விற்பனை செய்வோம்.
மழைக்காலங்களில் இதுபோன்ற தொழிலில் ஈடுபடமுடியாது. மூங்கில் பொருள்கள் மழையில் நனைந்தால் அது கருப்பாக மாறிவிடும். தற்போது பிளாஸ்டிக் வருகையால் மூங்கில் பொருள்களின் பயன்பாடு பெரிதும் குறைந்து விட்டது. மூங்கிலால் செய்யப்படும் பல்வேறு பொருள்களுக்கு மாற்றாக, பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதனால் மூங்கில் பொருள்களின் மவுசு குறைந்துவிட்டது.
பிளாஸ்டிக் பொருட்களின் ஆயுட்காலம் குறைவு. ஆனால், மூங்கில் கூடை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்கும். எனினும், தெரிந்த தொழில் என்பதால் இதை விடமுடியாமல் செய்து வருகிறோம். ஆனால், இதே நிலை நீடித்தால், வருங்காலத்தில் மூங்கில் முடைதல் தொழிலைச் செய்ய ஆள்கள் இருக்க மாட்டார்கள்.
இதனால், நாங்கள் அரசின் உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து, மூங்கில் பொருள்களைப் பயன்படுத்த உத்தரவிட வேண்டும். மூங்கில் அறுக்கும் இயந்திரம், துளைபோடும் இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்கள் வாங்க அரசு உதவ வேண்டும்.
காதி கிராப்ட் மூலம் பல்வேறு மரப் பொருட்களை வாங்கி, விற்பனை செய்கின்றனர். அதேபோல, மூங்கில் பொருட்களையும் எங்களிடம் இருந்து வாங்கி, காதி கிராப்ட் மூலம் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...