விடுதலைப் போராட்ட வரலாற்றில் திருநெல்வேலி மாவட்டம் குறிப்பிடும்படியான பங்களிப்பை அளித்துள்ளது. பூலித்தேவன், கட்டபொம்மன், சுந்தரலிங்கம், பாரதியார், வ.உ.சி, வாஞ்சிநாதன் ஆகியோர் வித்திட்ட நாட்டுப்பற்று உணர்வால், ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு, எழுச்சி ஏற்பட்டது. 1906-இல் தூத்துக்குடி, கொழும்பு துறைமுகங்களுக்கு இடையே வாடகைக் கப்பல்களை இயக்கும் சுதேசிக் கப்பல் கம்பெனி தொடங்கப்பட்டது. இந்த கம்பெனிக்கு நிதி திரட்ட வ.உ.சி உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தனர். 1908-இல் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் பங்கேற்ற சுதேசி இயக்க பிரசாரக் கூட்டங்கள் திருநெல்வேலி, தூத்துக்குடியில் நடைபெற்றன. அன்னிய நாட்டுப் பொருள்களைப் புறக்கணிக்கும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.