/

60 கி.மீ. தொலைவில் ஒரு தடுப்பணைகூட இல்லை: கடலில் வீணாகும் கொள்ளிடம் வெள்ளம்!

அரியலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டப்பட வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளுக்கும்

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:38 am

சி.சண்முகவேல்

அரியலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டப்பட வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 திருச்சி மாவட்டம், முக்கொம்பு காவிரியாற்றில் இருந்து பிரிந்து வடக்கு நோக்கிப் பாயும் கொள்ளிடம் ஆறு அரியலூர், கடலூர் மாவட்டம் வழியாகச் சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது. வெள்ளக் காலங்களில் காவிரியின் உபரிநீர் கொள்ளிடத்தில் திறந்துவிடப்படுவதால், காவிரியின் வடிகாலாக கொள்ளிடம் ஆறு உள்ளது.
 இந்த ஆறு அரியலூர் மாவட்டத்தில் சுமார் 63 கி.மீ. தொலைவை கடந்து செல்கிறது. இந்தப் பகுதியில் சுமார் 80 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் கொள்ளிடம் ஆற்றின் மூலம் பாசனம் பெறுகின்றன.
 கடந்த சில ஆண்டுகளாக சரியான நேரத்தில் மழை பெய்யாதது, காவிரிநீர் சரிவரக் கிடைக்காதது, குறைந்த தண்ணீரை கொண்டு விவசாயம் செய்யும் தொழில்நுட்பம் தெரியாதது ஆகிய காரணங்களால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
 மழைக் காலங்களில் காவிரியில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படும் உபரிநீர் நேராகக் கடலில் கலக்கிறது. திருச்சி, தஞ்சை மாவட்டம், கல்லணையில் இருந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கரை வரை ஒரு தடுப்பணைக்கூட இல்லாததால் தண்ணீர் வீராணம் ஏரிக்குச் சென்று வீணாகக் கடலில் கலக்கிறது.
 இந்த நீரை சேமிக்க தடுப்பணை அவசியம் என்று அரியலூர் மாவட்ட விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கொள்ளிடத்தில் 10 இடங்களில் தடுப்பணை கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
 ஆனால், அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆறு பாயும் 60 கி.மீ. பகுதியில் ஒரு தடுப்பணை கட்டுவதற்கான அறிவிப்புகூட அதில் இல்லை. இதனால், அரியலூர் மாவட்ட டெல்டா விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருமானூர் ஒன்றியச் செயலர் ஜி. ஆறுமுகம் கூறுகையில், வீராணம் திட்டம் கொண்டு வருவதற்கு முன்பே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவந்துள்ளோம்.
 திருச்சியை அடுத்த லால்குடியில் இருந்து அரியலூர் மாவட்டம் குருவாடி, ஏலாக்குறிச்சி, கொள்ளிடம் ஆற்றுப்படுகைகளில் குறைந்தது 12 இடங்களிலாவது தடுப்பணை கட்டினால்தான் விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.