தனியார் நிதிநிறுவனம் பொதுமக்களிடம் வசூலித்த ரூ.1500 கோடியை பாதிக்கப்பட்டவர்களுக்கு திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன ஊர்வலமும் புதன்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான தி.ராமசாமி தலைமை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான வி.அழகிரிசாமி, முன்னாள் மக்களவை உறுப்பினர் பி.லிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.பொன்னுப்பாண்டியன், மாநில குழுவைச் சேர்ந்த எஸ்.சமுத்திரம் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரை நிகழ்த்தினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், வட்டார செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், பி.ஏ.சி.எல் தனியார் நிதி நிறுவனம் விருதுநகர் கிளையில் செலுத்திய ரூ.1500 கோடியை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக லாபத்துடன் வழங்கவும், இந்நிறுவனத்தின் முகவர்கள் நெருக்கடியில் உள்ளதால் சட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.