விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர்களிடம் இருந்து பெயர் சேர்க்க, நீக்கம் செய்வதற்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் களத்தணிக்கை செய்ததில் நீக்கம் செய்ய தகுதியானவர்களின் பெயர் விவர பட்டியல் நகராட்சி, வட்டாட்சியர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் வே.ராஜாராமன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தி உறுதிப்படுத்தும் திட்டத்தின் அடிப்படையில் முகவரி, ஆதார் எண் உள்பட அனைத்து விவரங்களுடன் பதிவு செய்யும் பணிமேற்கொள்ளப்பட்டது. இம்மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இப்பணி கடந்த மார்ச்-1 முதல், ஜூன்-30ம் தேதி வரையில் வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்ப படிவங்களில் இருந்து பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தமும் செய்யப்பட்டன.
இதில், வாக்காளர்களின் விவரங்களை தணிக்கை செய்த போது இறப்பு, நிரந்தர இடமாற்றம் மற்றும் இரட்டை பதிவு போன்ற காரணங்களினால் நீக்கம் செய்ய தகுதி வாய்ந்ததாக சில வாக்காளர்களின் பெயர்கள் கண்டறியப்பட்டது. அதன் விவரங்கள் அந்தந்த வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் கடந்த 18-ம் தேதி முதல் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பட்டியலை நேரில் பார்வையிட்டு வாக்காளர்களுக்கு ஆட்சேபணைகள் இருந்தால், ஒரு வாரத்திற்குள் உதவி வாக்காளர் பதிவு அலுவலரிடம் தெரிவிக்கலாம். மேலும், இப்பட்டியலில் உள்ள விவரங்களை குறுந்தகடுகளில் பதிவு செய்து இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கிகாரம் பெற்ற அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.