ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கிராம உதவியாளர்களுக்கு விஏஓ பதவி உயர்வு

தமிழக வருவாய்த்துறை வரலாற்றில் முதல் முறையாக, கிராம உதவியாளர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவி உயர்வு அளிப்பதற்காக தகுதியானவர்கள் பட்டியல் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:42 am

சிவ. மணிகண்டன்

தமிழக வருவாய்த்துறை வரலாற்றில் முதல் முறையாக, கிராம உதவியாளர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவி உயர்வு அளிப்பதற்காக தகுதியானவர்கள் பட்டியல் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

கிராமங்களில் பகுதி நேர ஊழியர்களாகப் பணியாற்றிய கிராம உதவியாளர்கள் 1995- இல் முழுநேர அரசுப் பணியாளர்களாக்கப்பட்டனர். வருவாய்த் துறையில் கிராம உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணியில் சேருவோர் மட்டுமே எவ்வித பதவி உயர்வும் பெறாமல் இருந்தனர்.

2010-இல் கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களாகப் பதவி உயர்வு வழங்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் தொடர்ந்து பணி முடித்த கிராம உதவியாளர்களை தகுதியின் அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களில் 10 சதவீத இடங்களுக்கு பதவி உயர்வு அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த பதவி உயர்வு பெரும்பாலானோருக்கு கிடைக்கவில்லை.

தற்போது, கிராம நிர்வாக அலுவலர்களாக பதவி உயர்வு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு அதைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களில் 20 சதவீத பணியிடங்களை பணிமாற்றம் மூலம் கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கி பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்களுக்குத் தகுதியான கிராம உதவியாளர்கள் இல்லாத நிலையில், அப்பணியிடங்களை நேரடி நியமனத்தில் பூர்த்தி செய்து கொள்ளலாம் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியது: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 10 ஆண்டுகள் பணி முடித்த, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கிராம உதவியாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் 5-லிருந்து 10 கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வில் கிராம நிர்வாக அலுவலர்களாகப் பதவி உயர்வு பெற வாய்ப்பு உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் பதவி உயர்வு உத்தரவுகள் வழங்கப்பட உள்ளது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.