கோடை விழாவுக்கு தயார் நிலையில் ஏற்காடு!
சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காடு, வருடாந்திர கோடை விழாவுக்காக தயார் நிலையில் உள்ளது.


சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காடு, வருடாந்திர கோடை விழாவுக்காக தயார் நிலையில் உள்ளது.
கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலேயே அதிக உயரத்தில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள கோடை வாழிடம் ஏற்காடு ஆகும். சுற்றுலாப் பயணிகளுக்கு குறைந்த செலவிலேயே உதகைக்குச் சென்று வந்ததைப் போன்ற நிறைவைக் கொடுக்கக் கூடியது என்பதால் ஏற்காடு, "ஏழைகளின் ஊட்டி" என்று அழைக்கப்படுகிறது.
தமிழகத்தில் காபி விளைவிக்கும் முக்கிய இடங்களில் ஒன்றான ஏற்காட்டில், காபியைத் தவிர பிற தோட்டப் பயிர்களாக ஏலக்காய், கருமிளகு, ஆரஞ்சு, பலாப்பழம், மலை வாழை, பேரிக்காய், மா, கொய்யா போன்றவையும், மரப் பயிர்களாக சந்தன மரம், சில்வர் ஓக், தேக்கு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வகைகளும் விளைகின்றன.
ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரம் மில்லி மீட்டர் மழைப் பொழிவு பெறும் ஏற்காட்டில் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 4 மாதங்கள் இதமான கால நிலை நிலவும். இதேபோல, அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலும் அதிக குளிருடனும், இரண்டாவது சீசன் என்று அழைக்கப்படக் கூடிய இதமான சூழலும் நிலவும்.
கோடை காலத்தில் அதிகபட்சம் சுமார் 30 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை மட்டுமே இங்கு இருக்கும் என்பதால், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மாநிலத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம், ஆந்திரம் போன்ற பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திரண்டு வருவார்கள். இவர்களை மகிழ்விக்கும் விதமாக மே மாதத்தில் கோடை விழா நடைபெறும்.
இந்த ஆண்டு கோடை விழா 39-ஆவது விழாவாக ஜூன் முதல் வாரத்தின் இறுதி நாள்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து, கோடை விழாவுக்கான பல்வேறு முன்னேற்பாடு பணிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கி இப்போது நிறைவடையும் நிலையில் உள்ளன.
தாவரவியல் பூங்காவிலும் நிகழாண்டில் மலர்க் காட்சி: ஏற்காடு ஏரிக்கு அருகில் உள்ள அண்ணா பூங்காவில் மட்டுமே கடந்த 38 ஆண்டுகளாக மலர்க் கண்காட்சி நடைபெற்று வந்தது. ஆனால், ஏரிக்கு மேற்குத் திசையில் மலைக்குன்றின் மீது புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாவரவியல் பூங்காவிலும் நிகழாண்டில் மலர்க் கண்காட்சி நடைபெற உள்ளது. தாவரவியல் பூங்காவில் சுமார் 20 ஆயிரம் மலர்த் தொட்டிகளில் கடந்த ஜனவரி மாதம் ஊன்றப்பட்ட விதைகள் முளைத்து, செடிகளில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அழுகிய மலர்களை நீக்கிவிட்டு, இறந்த செடிகளை அகற்றி பூந்தொட்டிகளுக்கு தண்ணீர் ஊற்றி, அவற்றை செழிப்புடன் வைக்கும் பணியில் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்காடு மலர்க் கண்காட்சியை ஆண்டுதோறும் அலங்கரிக்கும் ஜினியா, சால்வியா, மேரிகோல்டு, வின்கா, பிரெஞ்சு மேரிகோல்டு, பெட்டுனியா, டான்ஸி, ஸ்னாப் டிரேகன், கிரைசாந்திமம், பிரசாந்தியம், செலோசியஸ், ஆஸ்டர், பிளாக்ஸ், கோரியாசிஸ், காரனேஷன், ஹாலியாக், டெய்ஸி, பார்த்திபிளம், வெர்பீனியம் உள்ளிட்ட 150 வகையான மலர்கள் இந்த ஆண்டும் பார்வையாளர்களுக்கு காட்சியளிக்கத் தயாராக உள்ளன.
இதைத் தவிர, ஏற்காட்டு பூ என்று அழைக்கப்படும் டெய்லியா மலர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்ட வகைகளில் அண்ணா பூங்காவிலும், பச்சை, கருப்பு, ஊதா போன்ற அரிய நிறங்கள் உள்ளிட்ட 100 வண்ணங்களிலான ரோஜா மலர்கள் அண்ணா பூங்கா ரோஜாத் தோட்டத்திலும், அரசு தோட்டக்கலைப் பண்ணையில் உள்ள ரோஜாத் தோட்டத்திலும் உள்ளன.
இவற்றைத் தவிர உதகை, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் இருந்து மலர்க் கண்காட்சிக்காக தருவிக்கப்படும் கொய் மலர் வகைகளான ஆந்தூரியம், கிளாடியோலஸ், அல்ட்ரோமேரியா, கெஜேனியா உள்ளிட்ட பல்வேறு வகையான சுமார் ஒரு லட்சம் மலர்கள் அடுத்த சில நாள்களில் ஏற்காடு வர உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...