/

தாலிக்குத் தங்கம் திட்டம் : டிப்ளமோ, நர்சிங், ஐடிஐ படித்த பெண்களுக்கும் வழங்கப்படுமா?

தமிழக அரசின் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், தகுதியுடைய படித்த அனைத்து பெண்களுக்கும் கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:05 pm

ஜி. சுந்தர் ராஜன்

தமிழக அரசின் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், தகுதியுடைய படித்த அனைத்து பெண்களுக்கும் கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விண்ணப்பித்துள்ள பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

÷தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது தேர்தல் வாக்குறுதியாக பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு, அவர்களின் திருமணத்தின்போது தாலிக்கு 4 கிராம் தங்கம், ரூ. 25 ஆயிரம் ரொக்கமும், பட்டம் படித்த பெண்களுக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

÷தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தமிழக முதல்வர் ஜெயலலிதா தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை தமிழக சமூக நலத்துறை மூலம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். ÷ஆனால் தமிழகத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தகுதியுடைய பெண்கள் இன்று வரை தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் கிடைக்காத நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

÷தமிழகத்தில் நர்சிங், பாலிடெக்னிக், ஆசிரியர் பட்டயப் பயிற்சி, ஐ.டி.ஐ. என படிப்புகளைப் படித்த பெண்கள் கடந்த அதிமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரை தாலிக்குத் தங்கம் திட்டத்துக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். மாவட்டத்துக்கு 200 பேர் வீதம், சராசரியாக தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காத்திருக்கின்றனர். குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் மட்டும் நர்சிங், டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்கள் தாலிக்குத் தங்கம் திட்டத்துக்கு காத்திருக்கும் பெண்களின் எண்ணிக்கை 153 ஆகும்.

÷இது குறித்து செய்தி கிடைத்த நாம் சமூக நலத்துறை அதிகாரிகளைச் சந்தித்து கேட்டபோது அவர்கள் தெரிவித்தது: நர்சிங், பாலிடெக்னிக், ஆசிரியர் பயிற்சி பெற்ற பெண்களுக்கு இன்று வரை தாலிக்குத் தங்கம் திட்டம் வழங்கவில்லை. இந்த பட்டய வகுப்புகள் மூன்று ஆண்டுகள் பயில்வது. இதைப் பட்டம் படித்த கணக்கில் எடுத்துக் கொள்வதா என்ற சந்தேகம் உள்ளது.

÷எனவே இவர்களுக்கு 4 கிராம் தங்கம் உண்டு. ஆனால் ரொக்கம் ரூ. 25 ஆயிரம் வழங்குவதா அல்லது ரூ.50 ஆயிரம் வழங்குவதா என்ற சந்தேகம் உள்ளது. இதை அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளோம்.

÷அரசிடமிருந்து பதில் கிடைத்தவுடன் அவர்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

÷இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தெரிவிக்கையில், இது சம்மந்தமாக என்னிடம் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இருந்து பல்வேறு பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். உடனே நான் சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதியை விழுப்புரத்தில் சில மாதங்களுக்கு முன்பு சந்தித்து ஐடிஐ, பாலிடெக்னிக், ஆசிரியர் பயிற்சி, நர்சிங் படித்த பெண்களுக்கும் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டேன். அவரும் இவர்களைப் பட்டம் படித்தவர்கள் கணக்கில் சேர்த்து தாலிக்குத் தங்கம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

÷ஆனால் இன்று வரை அந்த பெண்களுக்கு தங்கம் வழங்காதது வேதனையாக உள்ளது. எனவே தமிழக முதல்வர், ஏழை பெண்களின் நலன் கருதி அவர்களுக்கும் இந்தத் திட்டத்தை விரைவில் வழங்க உத்தரவிட வேண்டும் என்றார் கே.பாலகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.