100 ஆண்டு கால மஞ்சள் சந்தையில் அதிகபட்ச வரத்து
ஈரோடு: ஈரோடு மஞ்சள் சந்தையின் 100 ஆண்டுகால வரலாற்றில் அதிகபட்சமாக 2,000 மாதிரிகள் வரத்துப் பதிவாகியுள்ளது. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில், விலை குறைந்துவிடும் என்பதால் விவச


ஈரோடு: ஈரோடு மஞ்சள் சந்தையின் 100 ஆண்டுகால வரலாற்றில் அதிகபட்சமாக 2,000 மாதிரிகள் வரத்துப் பதிவாகியுள்ளது. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில், விலை குறைந்துவிடும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இந்தியாவில் ஆந்திரம், தமிழகம், மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவு மஞ்சள் பயிரிடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 15 லட்சம் ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வருவதாக மத்திய வேளாண் அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிர மாநிலத்தில் சாங்கிலி, தமிழகத்தில் ஈரோடு உள்ளிட்ட 3 இடங்களில் மட்டுமே தேசிய அளவில் புகழ்பெற்ற மஞ்சள் சந்தைகள் உள்ளன.
2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.18 ஆயிரமாக இருந்தது. கடந்த மாதம் ரூ.4,500 முதல் ரூ.5,000 வரை இருந்தது. திங்கள்கிழமை நிலவரப்படி ரூ.2,800 முதல் ரூ.3,500 வரை தான் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் ஈரோடு மஞ்சள் சந்தையில் வரலாற்றிலேயே முதல்முறையாக 2,000 மஞ்சள் மாதிரிகள் வரத்துப் பதிவாகியுள்ளது.
இது குறித்து, ஈரோடு மாவட்ட தனியார் மஞ்சள் கிடங்கு மற்றும் வியாபாரிகள் சங்கத் தலைவர் கே.வி.ரவிசங்கர் கூறியது:
2001-ம் ஆண்டு 1,800 மஞ்சள் மாதிரிகள் அதிகபட்ச பதிவாக இருந்தது.
அப்போது விலை குவிண்டாலுக்கு ரூ.1,500 ஆக இருந்தது. திங்கள்கிழமை நிலவரப்படி சாங்கிலி மஞ்சள் சந்தையில் ரூ.3,000 முதல் ரூ.3,800 வரையும், நிசாமாபாத் சந்தையில் ரூ.3,000 முதல் ரூ.3,500 வரையும் மஞ்சள் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஈரோடு சந்தையில் இப்போதுள்ள இடத்தில் 800 மாதிரிகள் மட்டுமே வைக்க முடியும். செம்மாண்டம்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள மஞ்சள் வணிக வளாகத்தைத் திறக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கத் தலைவர் பி.கே.தெய்வசிகாமணி கூறியது:
நாட்டில் சாகுபடி செய்யும் மொத்த பரப்பில் 41 சதவீதம் ஆந்திரத்திலும், 21 சதவீதம் தமிழகத்திலும், 7 சதவீதம் கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்திலும் உள்ளது.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மஞ்சள் சாகுபடி பரப்பு 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மஞ்சள் விலை அதிகமாக சரிந்துவிட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோட்டில் தனியார் சந்தைக்கும், ஒழுங்குமுறை விற்பனைக்கூட சந்தைக்கும் மஞ்சள் விலையில் ரூ.500 முதல் ரூ.1,000 வரை வித்தியாசம் உள்ளது.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மஞ்சள் மாதிரிகள் கூடுதலாக வைக்க அரசு ஏற்பாடு செய்தால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும். மஞ்சளுக்கு நியாயமான விலையை நிர்ணயித்து மத்திய, மாநில அரசுகள் நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.
ஈரோடு மஞ்சள் சந்தையில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மாதிரிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...