/

பருவமழை இல்லாததால் சிறிய வெங்காய சாகுபடி பாதிப்பு

கோவை: பருவ மழை பொய்த்ததால் கோவை பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சிறிய வெங்காயப் பயிரில் சாகுபடி குறையும் வாய்ப்புள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகளுக்குக் குறைந்தபட்சம் ரூ. 2.50 கோடி நஷ்டம் ஏற்படும் என்று வி

News image
Updated On :2 ஜனவரி 2024, 6:04 pm

ஆர். வேல்முருகன்

கோவை: பருவ மழை பொய்த்ததால் கோவை பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சிறிய வெங்காயப் பயிரில் சாகுபடி குறையும் வாய்ப்புள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகளுக்குக் குறைந்தபட்சம் ரூ. 2.50 கோடி நஷ்டம் ஏற்படும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

கோவை மாவட்டத்தில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் சிறிய வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. 90 நாள் பயிரான சிறிய வெங்காயம் ஏக்கருக்கு 6 டன் முதல் 8 டன் வரை மகசூல் கொடுக்கும். சிறந்த விதை கிடைத்து, உரிய நேரத்தில் மருந்து தெளித்து சிறந்த முறையில் பராமரித்தால் கூடுதல் மகசூல் கிடைக்கிறது. 8 டன் விளைச்சல் என்றால் கிலோவுக்கு ரூ. 10 வீதம் கணக்கிட்டாலும் ரூ. 80 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும்.

இப்போது வெங்காயத்தைப் பயிரிட்டு சுமார் 30 நாள்கள் மட்டும் ஆகிறது. இந்த நிலையில் பொதுவாக பருவ மழை பெய்து கொண்டிருக்கும். ஆனால் இதுவரை மழை இல்லாததால் சிறிய வெங்காயச் செடிகள் பச்சை நிறத்துக்குப் பதிலாக வெளிர் நிறமாகப் மாறத் துவங்கியுள்ளன.

மழை இல்லாததால் இப்போது வெங்காயப் பயிரில் வேர் அழுகல் நோய் மற்றும் நுனிக் கருகல் நோய் பாதிப்பு தென்படுகிறது. இந்நோயின் பாதிப்பால் சிறிய வெங்காய மகசூல் ஏக்கருக்கு 3 டன் முதல் 4 டன் வரை மட்டுமே கிடைக்கும். 4 டன் விளைச்சல் என்றால் கிலோ ரூ. 10 வீதம் ரூ. 40 ஆயிரம் மட்டுமே கிடைக்கும்.

சிறிய வெங்காயம் பயிரிட ஓர் ஏக்கருக்கு சுமார் ரூ. 45 ஆயிரம் வரை செலவாகிறது. ஏக்கருக்கு 8 டன் வெங்காயம் விளைச்சல் கிடைத்தால்தான் ஏக்கருக்கு ரூ. 80 ஆயிரம் வரை விலை கிடைக்கும்; அதில் விவசாயிகளுக்கு லாபமும் இருக்கும்.

ஆனால் நோய்த் தாக்கம் காரணமாக, தற்போது உத்தேசமாக 4 டன் மட்டுமே விளைச்சல் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதை விற்கும்போது ரூ. 40 ஆயிரம் மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது. அதாவது, ஓர் ஏக்கருக்கு ரூ. 5,000 நஷ்டம் ஏற்படும். உற்பத்திக் குறைவு காரணமாக விலை அதிகரித்தால் நஷ்டமில்லாமல் விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கருதுகின்றனர். ஆனால் இதை உறுதியாகக் கூற முடியாது.

தற்போதைய நிலையில், மொத்தம் 5,000 ஏக்கருக்கு தலா ரூ. 5,000 வீதம் நஷ்டம் எனில், விவசாயிகளுக்கு மொத்தம் ரூ. 2.50 கோடி நஷ்டம் ஏற்படும் வாய்ப்புள்ளது என்கின்றனர் விவசாயிகள்.

இது தொடர்பாக மாதம்பட்டியைச் சேர்ந்த விவசாயி விஜயன் கூறியது: ÷

இது பருவ மழை பெய்ய வேண்டிய தருணம். மழை பெய்யாததால் நுனிக் கருகல் மற்றும் வேர் அழுகல் நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் மகசூல் குறையும் வாய்ப்புள்ளது. இதனால் வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு இம்முறை நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்றார்.

இது தொடர்பாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் வின்சென்ட் கூறுகையில், தொண்டாமுத்தூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சிறிய வெங்காயத்தில் நோய் இருந்தால் தெரிவிக்கும்படி வேளாண் அலுவலர்களிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நோய் இருப்பது தெரியவந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.