/

அரியலூரில் மகளிர் நீதிமன்றம் அமைக்கப்படுமா?

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் பதிவாகும் மகளிர் தொடர்பான வழக்குகள் யாவும் பெரம்பலூரில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்படுகின்றன. இதனால், பல்வேறு தரப்பினரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இ

News image
Updated On :2 ஜனவரி 2024, 4:12 pm

கு. வைத்திலிங்கம்

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் பதிவாகும் மகளிர் தொடர்பான வழக்குகள் யாவும் பெரம்பலூரில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்படுகின்றன. இதனால், பல்வேறு தரப்பினரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்ற, அரியலூரில் மகளிர் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

மேலும், அரியலூரில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்றத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1895-ஆம் ஆண்டில் அரியலூரில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 1981-ல் அரியலூரில் சார்பு நீதிமன்றமும், 2002-ல் விரைவு நீதிமன்றமும் தொடங்கப்பட்டு, தற்போது இயங்கி வருகின்றன. இதைத் தொடர்ந்து, மாவட்டத் தலைநகராக உருவாக்கப்பட்ட அரியலூரில் 2011-ல் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தொடங்கிவைக்கப்பட்டது.

தற்போது அரியலூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், கூடுதல் மாவட்ட மற்றும் விரைவு நீதிமன்றம், உதவி அமர்வு சார்பு நீதிமன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஆனால், எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நீதிமன்றமாகவே அரியலூர் நீதிமன்றம் திகழ்கிறது.

நீதிமன்றத்துக்கு அருகில் பேருந்து நிலையம் இருப்பதால், பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளின் திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாக அந்தப் பகுதி உள்ளது. இதனால், நீதிமன்றம் வரையிலும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக, மாலை நேரங்களில் நீதிபதிகள் நீதிமன்றத்தில் பணியாற்ற முடியாத சூழல் உருவாகிறது. கொசுத் தொல்லையும் அதிகம். நீதிமன்றத்தில் பிரிண்டர்கள், ஜெராக்ஸ் இயந்திரங்கள் வைப்பதற்குக் கூட இடம் இல்லாத நிலை இருந்து வருகிறது என்கின்றனர் வழக்குரைஞர்கள்.

நீதிமன்றத்துக்குள் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால், நீதிமன்றத்துக்கு வரும் வழக்குரைஞர்கள், வழக்கோடு தொடர்புடையவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். மாவட்ட நீதிமன்றம் அரியலூரில் அமைந்தாலும், மாவட்ட நீதிமன்றத்துக்குரிய எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலைதான் இங்கு நிலவி வருகிறது என்கின்றனர் வழக்குரைஞர்கள் பலர்.

அதுபோல, நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள பகுதி நீதிமன்றத்துக்குச் சொந்தமானது. இந்த இடத்தை மேம்படுத்தித் தருவதற்குரிய பணிகளை பொதுப் பணித் துறையினர் மேற்கொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது என்கின்றனர் அவர்கள்.

மாவட்ட நீதிபதிக்கு அரசு வாகனம் எப்போது? அரியலூரில் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி பதவியேற்று 6 மாதங்கள் ஆக உள்ள நிலையில், இன்னமும் அவர் தனது சொந்த வாகனத்தைத்தான் பயன்படுத்தி வருகிறார். மாவட்ட நீதிபதிக்கு அரசு வாகனம் எப்போது வழங்கப்படும் என்ற கேள்வியும் அரியலூர் வழக்குரைஞர்களிடம் தொடர்ந்து இருந்து வருகிறது.

மகளிர் தொடர்பான வழக்கு : மாவட்ட நீதிமன்றம் இல்லாத போதும், மகளிருக்கு எதிரான வழக்குகளை அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களே விசாரிக்கலாம் என்று உள்ள நிலையில், அரியலூரில் மாவட்ட நீதிமன்றம் அமைந்து 6 மாதங்களாகியும், இன்னமும் பெரம்பலூரில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில்தான் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இதனால், வழக்கு விசாரணைக்காக மாவட்டத்தின் கடைகோடி பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரம்பலூர் வரை சென்று வர வேண்டிய நிலை இருந்து வருகிறது. தற்போது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. முன்புதான் மாவட்ட நீதிமன்றம் இல்லை எனக் கூறினார்கள். இப்போது மாவட்ட நீதிமன்றம் வந்த பிறகும், பெரம்பலூரில் தொடர்ந்து விசாரணை நடப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை என்கின்றனர் வழக்குரைஞர்கள். எனவே, அரசு உடனடியாக அரியலூரில் மகளிர் நீதிமன்றம் அமைப்பதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.